என்னது 2ஜி கேஸ்ல தீர்ப்பு வந்துடுச்சா, எல்லாரும் விடுதலையாயிட்டாங்களா?: கடுப்பு, களிப்பு, பெருமை, பொறாமை
’ஊழலா ஆ.ராசாவும், கனிமொழியுமா? அய்யகோ இது அந்த பரந்தாமனுக்கே அடுக்காதே! அந்த பச்ச மண்ணுகள பார்த்து ஊழல்வாதிகள்னு பேசுறேளே. நீங்கள்ளாம் மனுஷாள்தானா? சோத்துல உப்பு போட்டுத்தான் சாப்பிடுறேளா?’ எனும் ரேஞ்சில் நேற்று வந்த தீர்ப்பில் ஆளாளுக்கு ஆனந்தத்தில் திக்குமுக்காடியும், அதிர்ச்சியில் உறைந்தும் கிடக்கிறார்கள்.
இந்த வேளையில் இந்த தீர்ப்பை பற்றி யார், யார், என்னென்ன சொன்னா? என்று தெரிஞ்சுக்றது ரொம்ப முக்கியமில்லையா...
“வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு. தி.மு.க.வை நசுக்க வேண்டும் எனும் நோக்கில் புனையப்பட்ட இந்த வழக்கில் சம்மட்டி அடி தீர்ப்பு வந்துள்ளது.”
- ஸ்டாலின்.
“தனிப்பட்ட முறையில் எனக்கு மகிழ்ச்சி. பாராளுமன்றத்தில் நான் எம்.பி.யாக இருந்தபோது ராசா மத்தியமைச்சராக இருந்தார். அவரை எனக்கு நன்றாக தெரியும். கனிமொழியும் தெரிந்தவரே. ஒரு வழக்கில் இரண்டு தமிழர்கள் விடுதலையானதில் எனக்கு மகிழ்ச்சியே. அடுத்த மனுஷன் ஜெயிலுக்குள்ளே போகணும்னு நினைக்குறது எப்படி சரியா வரும்?”
- டி.டி.வி. தினகரன்.
”இந்த வெற்றி எங்களுக்கு கூறுவது இனி எல்லாமே எங்களுக்கு வெற்றி என்பதையே.”
- துரைமுருகன்.
“மிகப்பெரிய ஊழல் வழக்குகளில் ஒன்று 2ஜி வழக்கு. ஆனால் இந்த வழக்கில் இன்று அனைவரும் விடுதலையாகி உள்ளனர். அப்படியானால் சிபிஐ வேண்டுமென்றே வழக்கில் குளறுபடி செய்ததா? மக்களுக்கு பதில் தேவை.”
- அரவிந்த் கெஜ்ரிவால்.
“ நீதிபதி ஷைனி தப்பான தீர்ப்பை வழங்கிவிட்டார் என்று மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இந்த தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும். அது குறித்து நான் விரைவில் கலந்தாலோசிப்பேன்.”
- சுப்பிரமணியன் சுவாமி.
“இந்த வழக்கின் மூலம் தங்களுக்கு ஏதோ பதக்கம் கிடைத்துவிட்டதாக நினைத்து காங்கிரஸார் கொண்டாட வேண்டாம். காலம் இதை மாற்றும்.”
- அருண் ஜெட்லி.
“காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு எதிரான தீய பரப்புரைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி விழுந்துள்ளது. இந்த தீர்ப்பிற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன்.”
- மன்மோகன் சிங்
”இல்லாத ஊழலை விசாரிக்குறதுக்காக பல கமிஷன்களை அமைச்சாங்க. ஆனாலும் நீதி வென்றது.”
- ஆர்.எஸ்.பாரதி.
“காங்கிரஸ் மற்றும் தி.மு.க. மீது சுமத்தப்பட்ட களங்கம் துடைத்தெறியப்பட்டிருக்கிறது. பா.ஜ.க.வின் விஷம பிரச்சாரம் தவிடுபொடியாகி இருக்கிறது. இந்த தீர்ப்பை நான் வரவேற்கிறேன்.”
- திருநாவுக்கரசர்.
“நாங்கள் குற்றமற்றவர்கள் என்பது நிரூபணமாகியிருக்கிறது. சத்யமேவ ஜெயதே!”
- குஷ்பூ
”தி.மு.க. சந்தித்த அனைத்து இழப்புக்களையும் சரி செய்யும் வகையில் இந்த தீர்ப்புஅமைந்துள்ளது.”
- திருமாவளவன்
“நீதிமன்ற தீர்ப்பு தி.மு.க.விற்கு மேலும் பலத்தை அதிகரிக்கும். இந்த தீர்ப்பை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.”
- முத்தரசன்.
”இந்த தீர்ப்பை தீர்ப்பாக பார்க்கிறேன் அவ்வளவே. இனிமேல் இந்த வழக்கு எப்படி போகுமென்பதை பொறுத்திருந்து கவனிப்போம். அதற்காக காங்கிரஸ் ஆட்சியில் ஊழலே நடக்கவில்லை என்று அர்த்தமில்லை.”
- தமிழிசை சவுந்திரராஜன்.
“தீர்ப்பு வந்துடுச்சா? என்னது, எல்லாரும் விடுதலை ஆயிட்டாங்களா! இந்த தீர்ப்பு பற்றி நான் கருத்து சொல்ல விரும்பல.”
- நாஞ்சில் சம்பத்