அனல் பறக்கும் அரசியல் களம்... நாளை வாக்கெடுப்பில் தெறிக்கவிடப்போவது யார் ?..... என்ன நடக்கும்?....ஓர் அலசல் ரிப்போர்ட்
கர்நாடகாவில் நடை பெற்ற தேர்தலில் பா.ஜ.க 104 இடங்களில் வெற்றிபெற்றிருக்கிறது. காங்கிரஸ் 78 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 இடங்களிலும், வென்றிருக்கிறது. அதிக தொகுதிகளில் பா.ஜ.க வெற்றி பெற்றிருந்தாலும் ,கர்நாடகாவில் அவர்கள் ஆட்சி அமைக்க தடையாக இருக்கிறது, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம்.
இந்த இரண்டு கட்சிகளும் கூட்டணி வைக்கும் பட்சத்தில் பா.ஜா.க வினால் பெறும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போய்விடும். கூட்டணிக்கட்சி தான் ஆட்சி அமைக்க இயலும். இந்த குழப்பங்களுக்கு இடையே நேற்று எடியூரப்பா கர்நாடக முதல்வராக பதவி ஏற்றிருந்தார். அவருக்கு தனது கட்சி பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம் கொடுத்திருந்தார் கர்நாடக ஆளுநர்.
இதனை தொடர்ந்து காங்கிரசும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டனர். இதனால் தற்போது எடியூரப்பாவிற்கு தனது கட்சி பெரும்பான்மையை நிரூபிக்க ஒரு நாள் மட்டுமே அவகாசம் கொடுத்து உத்தரவிட்டிருக்கிறது. கர்நாடக உச்ச நீதி மன்றம். இதனால் நாளை மாலைக்குள் கட்சி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது பா.ஜ.க.
தற்போது உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பின்படி, பா.ஜ.க தற்காலிக சபாநாயகரை தேர்வு செய்து ,பெரும்பான்மை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என தெரிவித்திருக்கிறது. மேலும் ரகசிய வாக்கெடுப்பை கூடாது. கைகளை உயர்த்த சொல்லி வாக்கெடுக்க வேண்டும். என்றும் அறிவுருத்தியிருக்கிறது.
பொதுவாக சட்டமன்றத்தில் வாக்களிப்பதில் மூன்று முறைகள் இருக்கின்றன.
ரகசிய வாக்கெடுப்பு, குரல் மூலம் வாக்கெடுப்பு, கைகளை உயர்த்தி வாக்கெடுப்பு நடத்தும் முறை ஆகிய மூன்று முறைகள் இருக்கின்றன. இதில் ரகசிய வாக்கெடுப்பு முறையில் எம்.எல்.ஏ-க்கள் தங்கள் பெயர் மற்றும் தொகுதி போன்றவற்றை எழுதி அங்கிருக்கும் வாக்குப்பெட்டியில் போட வேண்டும். இந்த முறையில் பல சிக்கல்கள் இருக்கின்றன. எம்.எல்.ஏ-க்கள் சிலர் மாற்றி வாக்களித்து குழப்பத்தை அதிகரிக்கக் கூடும். அதனால் இந்த முறை வேண்டாம். என நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
தமிழகத்தில் அதிமுக பெரும்பான்மையை நிரூபிக்க, இந்த முறையை தான் மேற்கொள்ளவேண்டும் என திமுக,காங்கிரஸ் மற்றும் ஓ.பி.எஸ் அணி கேட்டு கொண்டன. ஆனால் சபா நாயகர் முழு அதிகாரம் தன் கையில் என்பதால், கைகளை உயர்த்தி வாக்களிக்கும் முறையை தேர்வு செய்து, வாக்கெடுப்பை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் தற்போது கர்நாடகாவில் நிலவும் சூழலுக்கு, கைகளை உயர்த்தி வாக்களிக்கும் முறையே ஏற்றது, என நீதி மன்றமே உத்தரவிட்டிருக்கிறது.
இந்த முறையில் வாக்களிக்க தேர்வு செய்யப்பட்டிருக்கும் எம்.எல்.ஏ-க்கள் 6 பிரிவுகளாக பிரித்து அமர்த்தப்படுவார்கள். அதில் முதல் மூன்று பிரிவில் பா.ஜ.க-வும் அடுத்த மூன்று பிரிவுகளில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் உறுப்பினர்கள் அமர்த்தப்படுவார்கள். ஏ, பி என வரிசைப்படி வாக்கெடுப்பு நடத்தப்படும் . 6 பிரிவுகளில் அமர்ந்திருக்கும் உறுப்பினர்களிடமும் ஒவ்வொரு பிரிவாக, ஏ-ஐ ஆதரிப்பவர்கள் யார்? எனவும் எதிர்பவர்கள் யார்? எனவும், பி-ஐ ஆதரிப்பவர்கள் யார்? எதிர்பவர்கள் யார்? எனவும் கேட்டு குறித்துக்கொள்ளப்படும். வாக்கெடுப்பின் இறுதி முடிவை சட்டப்பேரவை செயலர் அறிவிப்பார்.
இப்போது பா.ஜ.க-வில் 104 எம்.எல்.ஏ-க்கள் இருக்கின்றனர் இதில் ஒருவரை தான் அவர்கள் சபாநாயகராக தேர்வு செய்ய வேண்டும் அந்த ஒருவரின் வாக்கு பா.ஜ.க-விற்கு கிடைக்காது. ஒரு வேளை சமநிலை ஏற்பட்டு இழுபறி நடக்கும் போது அவரின் வாக்கு பா.ஜ.க-விற்கு பயன்படும்.
இப்போது பா.ஜ.க-விடம் சுயேட்சை ஆதரவு எம்.எல்.ஏ-வையும் சேர்த்து 105 பேர் இருக்கின்றனர். காங்கிரஸ் 78 , ம.ஜ.த 37 மற்றும் சுயேட்சை ஆதரவு எம்.எல்.ஏ 2 என இந்த காங்கிரஸ் கூட்டணிக்கட்சியிடம் 117 பேர் இருக்கின்றனர். இதில் ம.ஜ.த வை சேர்ந்த குமாரசாமி இரண்டு இடங்களில் வென்றுள்ளதால் அவரால் ஒரு வாக்கு மட்டுமே அளிக்க இயலும் இதனால் 116 வாக்குகள் காங்கிரஸ் ம.ஜ.த கூட்டணிக்கு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
இந்த வாக்கெடுப்பில் பா.ஜ.க வெற்றி பெற வேண்டுமானால் 104-ஆக இருக்கும் பா.ஜ.க-வின் பக்கம் இன்னும் 7 எம்.எல்.ஏக்கள் வர வேண்டும். ஆனால் அப்படி 7 எம்.எல்.ஏ-க்கள் மட்டும் வந்தால், அவர்கள் கட்சித்தாவல் தடைச்சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்டு பதவி பறி போய்விடும். 25 எம்.எல்.ஏக்கள் ம.ஜ.த வில் இருந்து வந்தால் அவர்கள் கட்சித்தாவல் தடைச்சட்டத்தின் கீழ் வரமாட்டார்கள். அதே போல காங்கிரஸ் பிளவு பட்டு 51 எம்.எல்.ஏக்கள் பாஜகவின் பக்கம் வந்தாலும் கட்சித்தாவல் தடைச்சட்டத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது.
நாளை மாலைக்குள் பா.ஜ.க வால் இத்தனை எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் ஈர்க்க முடியுமா? என தெரியவில்லை ஏனென்றால் காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த எம்.எல்.ஏக்கள், கடும் பாதுகாப்பில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
பெருப்பான்மையான அரசியல் ஆலோசகர்களின் கணிப்பு என்ன? என்றால் இந்த வாக்கெடுப்பில் பா.ஜ.க வெற்றி பெற வாய்ப்பு குறைவு என்பதே. ஆனாலும் சபாநாயகர் பா.ஜ.க-வை சேர்ந்தவர் என்பதால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். எனவும் ஒரு தரப்பு தெரிவிக்கிறது. நாளை மாலைக்குள் கர்நாடக அரசியலில் நடக்கப்போகும் இந்த மாற்றத்தை காண இந்தியா முழுவதுமே பேராவலுடன் காத்திருக்கிறது. கர்நாடகாவில் நேற்று மலர்ந்திருக்கும் தாமரை, அப்படியே பூத்துக்குலுங்கப்போகிறதா? இல்லையா என நாளை மாலைக்குள் தெரிந்துவிடும்.