பாமக பல வருஷமா ஃபாலோ பண்ணதை பட்டி டிங்கரிங் பார்த்து பளபளப்பாக்கிய கமல்!? அரசுக்கு அடுக்கடுக்கா கேள்விகளை தெறிக்கவிடும் ஆண்டவர்...
சட்டமன்ற ஜனநாயகத்தில் மாதிரி பட்ஜெட் உள்ளிட்ட பாமக பல வருடங்களாக பின்பற்றி வந்த சில வழிமுறைகளில் மேலும் சில புதுமையான சில விஷயங்களை சேர்த்து தற்போது மக்கள்நீதி மய்ய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் செயல்பட்டு வருகிறார்.
தமிழக சட்டமன்றத்தில் 89 எம்.எல்.ஏ.க்களைப் பெற்றிருக்கும் திமுக, இந்த சட்டமன்றக் கூட்டத் தொடர் முழுவதையும் புறக்கணிக்கப் போவதாக அறிவித்திருக்கிறது. அதற்கு பதிலாக இனி வரும் நாட்களில் திமுக உறுப்பினர்கள் சட்டமன்றம் வரமாட்டார்கள் என்றும் அதற்கு பதிலாக கட்சித் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் போட்டி சட்டமன்றம் நடத்த உள்ளதாக அறிவித்தது. இந்தன் முதல் மாதிரி சட்ட சபை நிகழ்ச்சி இன்று தொடங்கி நடந்து வருகிறது.
அதேநேரம், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கட்சி தொடங்கிய கமல் ஹாசன், சட்டமன்றத்தில் ஒவ்வொரு நாளும் நடைபெறும் நிகழ்ச்சி நிரலை கையில் வைத்துக் கொண்டு, ஒவ்வொரு நாளும் எந்தத் துறைக்கான மானியக் கோரிக்கை நடைபெறுகிறதோ? அந்த துறை அமைச்சரிடம் கேட்கப்பட வேண்டிய கேள்விகளை வெளியிட்டு புதிய ‘கேள்வி’அரசியலை நடத்தத் தொடங்கியிருக்கிறது.
தமிழக சட்டமன்றத்தில் நடக்கும் மானியக் கோரிக்கைகள் பற்றிய விவாதம் தொடர்பாக “மக்கள் நீதி மய்யம்” சிற்றாய்வு மையம் எனப்படும் ஆலோசனைக் குழு கூடி விவாதிக்கிறது. மேலும் விசில்செயலியின் மூலம் மக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற கேள்விகளையும், தகவல்களையும் ஆராய்ந்து அந்தந்த துறை சார்ந்த கேள்விகளாக தயார் செய்கிறார்கள்.
“ஒரு பொறுப்பான அரசியல் கட்சியாக அரசு மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் முன்பு மக்கள் நீதி மய்யம் இந்தக் கேள்விகளை முன் வைக்கிறது. இக்கேள்விகளை சட்டமன்றத்தில் எழுப்பி மக்கள் நலனுக்காக தங்கள் கடமையை ஆற்றுமாறு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் வைக்கிறோம்’’ என மக்கள் நீதி மய்யம் மக்களிடம் வேண்டுகோள் வைத்திருக்கிறது.
அதன்படி சட்டமன்றம் தொடங்கிய மே 29 ஆம் தேதி நடைபெற்ற சுற்றுச் சூழல் துறைக்கான மானியக் கோரிக்கையில் கேட்கப்பட வேண்டிய கேள்விகளை மக்கள் நீதி மய்யம் கட்சி நேற்று வெளியிட்டது. மேலும், இன்று 30 ஆம் தேதி நடந்த பள்ளிக் கல்வித் துறை தொடர்பான மானியக் கோரிக்கை தொடர்பான கேள்விகளை இன்றைக்கு வெளியிட்டது.
அதில், ’’மாணவர்கள் பொது அறிவு மற்றும் மொழித்திறனை வளர்த்துக் கொள்ளும் வகையில் 31ஆயிரத்து 322 பள்ளிகளுக்கு 4.83 கோடி மதிப்பிலான சிறுவர் நாளிதழ்களும், சிறுவர் இதழ்களும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட அறிவிப்பின் இப்போதைய நிலை என்ன?
30 கோடி ரூபாய் மதிப்பில் அரசு பொது நூலகத்துக்கு நூல்கள் வாங்குவதற்கு தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் மூலம்நூல்கள் வாங்கப்பட்டுள்ளதா, விவரங்கள் என்ன?
மாணவியர் படிக்கும் நடுநிலைப் பள்ளிகளில் நாப்கின் வழங்கும் இயந்திரங்களும், எரியூட்டி இயந்திரங்களும் இன்றும் அமைக்கப்படாததன் காரணம் என்ன?’’ என்று பள்ளிக் கல்வித் துறைக்கு கேள்விகளை முன் வைத்துள்ளது.
உயர் கல்வித் துறை மானிய கோரிக்கையில், ‘பல்கலைக் கழகங்களுக்கு துணை வேந்தர்களை தேர்ந்தெடுப்பதற்கு தன்னிச்சையான அமைப்பை ஏற்படுத்த சட்டத் திருத்தம் கொண்டு வருமா அரசு?’ என்று கேட்டிருக்கிறது. சட்டமன்றத்தில் மேற்கண்ட கேள்விகளைக் கேட்க வேண்டியது எதிர்க்கட்சிகள். இந்தக் கேள்விகளை முன் வைத்துள்ளது மக்கள் நீதி மய்யம்.