today tamilnadu assembly

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், இன்று கூடும் சட்டப் பேரவைக் கூட்டத்தில், புயலடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வறட்சி, குடிநீர் பிரச்சனை, ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள ஆளுங்கட்சியினர் கூவத்தூரில் நடத்தப்பட்ட குதிரை பேரம் போன்ற பல பிரச்சனைகள் சட்டப் பேரவையில் எழுப்பப்படும் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசின், 2017 - 18ம் ஆண்டுக்கான பட்ஜெட், கடந்த மார்ச், 16 ஆம் தேதி , சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் மீதான விவாதம் முடிந்து, மார்ச், 24ல், சட்டசபை மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து துறை வாரியாக, மானியக் கோரிக்கை மீது விவாதம் நடத்தி, துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதிக்கு, ஒப்புதல் பெறுவதற்காக, சட்டசபை கூட்டத்தொடர் இன்று துவங்குகிறது.

இன்று முதல், ஜூலை, 17 வரை, இந்த கூட்டம் நடைபெறும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் ஆளுங்கட்சியில் பெரும் பிளவு ஏற்பட்டு எம்எல்ஏக்கள் 3 பிரிவுகளாக உள்ளது. எடப்பாடி, டிடிவி, ஓபிஎஸ் என எம்எல்ஏக்கள் பிரிந்து நிற்பதால் பரும் குழப்பம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சசிகலா குடும்பத்தினர், எம்எல்ஏக்களை, கூவத்துார் சொகுசு விடுதியில் தங்க வைத்திருந்த போது, அவர்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய், கிலோ கணக்கில் தங்கம் வழங்கியதாக, தகவல் வெளியானது.தற்போது, அதை உறுதிப்படுத்தும் வகையில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஒப்புதல் வாக்குமூலம் அளித்த, 'வீடியோ' காட்சிகள், 'டிவி'யில் ஒளிபரப்பானது.
சட்டசபையில் இந்த பிரச்னையை எழுப்ப, பிரதான எதிர்க்கட்சியான, தி.மு.க., முடிவு செய்துள்ளது. மேலும், குடிநீர் பிரச்னை, விவசாயிகள் பிரச்னை உள்ளிட்ட மக்கள் பிரச்னைகளும், லஞ்ச புகாரில் தினகரன் கைது, அமைச்சர் வீட்டில் சோதனை உள்ளிட்ட அரசியல் விவகாரங்களும், சபையில் புயலை கிளப்பும் என, கூறப்படுகிறது.

இதனிடையே ஜி.எஸ்.டி., வரி விதிப்புக்கான மசோதா உட்பட, பல்வேறு முக்கிய சட்ட மசோதாக்களை நிறைவேற்றவும், அரசு முடிவு செய்துள்ளது. -
சட்டசபையில் இன்று, வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை, மானியக் கோரிக்கை மீது, விவாதம் நடைபெற உள்ளது.