ராகுல் காந்தியின் கைகளுக்கு வரும் காங்கிரஸ் !! இன்று தலைவராக பொறுப்பேற்கிறார் !!!
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி இன்று பொறுப்பேற்றுக் கொள்கிறார். நேரு குடும்பத்தில் இருந்து 6 ஆவது தலைவராக ராகுல் காந்தி உருவெடுத்துள்ளார்.
கடந்த 19 ஆண்டுகளாக அகில இந்திய காங்கிரஸ் தலைவராக சோனியா செயல்பட்டு வந்தார். இப்போது 71 வயதாகும் சோனியாவுக்கு கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார். இதனால், பொது நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பதையும் தவிர்த்து வந்தார்.
இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக இருந்துவரும் ராகுல் காந்தியை தலைவராக்க வேண்டும் என்று காங்கிரஸ் நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தல்கள் நடந்து முடிந்ததையடுத்து, தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. தலைவர் பதவிக்கு கடந்த 1-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது.
ராகுல் காந்தி கடந்த 4-ம் தேதி வேட்புமனுவை தாக்கல் செய்தார். மொத்தம் தாக்கலான 89 வேட்புமனுக்களும் ராகுலை தலைவர் பதவிக்கு அறிவிக்கக் கோரியே தாக்கல் செய்யப்பட்டன.
ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் போட்டியிட்டால் 16-ம் தேதி தேர்தல் நடக்கும் என்றும் 19-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. மனுக்களை வாபஸ் பெற 11-ம் தேதி கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், ராகுலைத் தவிர வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றி தேர்தெடுக்கப்பட்டார். இதனை அக்கட்சியின் மத்திய தேர்தல் ஆணையத்தின் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இதையடுத்து தில்லியில் உள்ள 132 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் இன்று ராகுல் காந்தி அதிகாரப்பூர்வமாக பதவியேற்கிறார். அப்போது தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழும் அவருக்கு அளிக்கப்பட இருக்கிறது.