today neet pro meeting at tricy by bjp

தமிழகத்தில் எதிர்கட்சியினரின் எதிர்மறை அரசியலை எதிர்த்தும் நீட் தேர்வுக்கு ஆதரவு தெரிவித்தும் திருச்சியில் இன்று பாஜக சார்பில் பொதுக் கூட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வுக்கு எதிராக திருச்சி தென்னூர் உழவர் சந்தை திடலில் எதிர்க்கட்சிகள் சார்பில் நேற்று கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்றுப் பேசிய எதிர்கட்சித் தலைவர்கள், நீட் தேர்வை தமிழகத்தில் இருந்து முற்றிலுமாக நீக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் வரும் 13 ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் எதிர்கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எதிர்கட்சிகள் அறிவித்துள்ளன.

இந்நிலையில், தமிழகத்தில் எதிர்க்கட்சியினரின் எதிர்மறை அரசியலை எதிர்த்து இன்று திருச்சி உழவர் சந்தை திடலில் பா.ஜ.க. தரப்பில் பொதுக்கூட்டம் நடத்தப்படும் என தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார்.

நீட் தேர்வில் உள்ள உண்மை நிலையை தமிழக மக்களுக்கு எடுத்துக் கூறவே இக்கூட்டம் என்றும், இதில் பா.ஜ.க. தொண்டர்களும், பொது மக்களும் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்றும் தமிழிசை கேட்டுக் கொண்டுள்ளார்.