நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்த வேட்பாளர்கள், இன்று பிற்பகல் 3 மணிக்குள் வாபஸ் பெற வேண்டும் என்பதால், இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாக இருக்கிறது.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1064 மாநகராட்சி உறுப்பினர்கள், 3468 நகராட்சி உறுப்பினர்கள், 8288 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,820 பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதற்காக கடந்த மாதம் 28ஆம் தேதி தொடங்கிய வேட்புமனுத்தாக்கல் 4ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. மொத்தம் 74,416 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. இன்று வேட்பாளர்கள் தங்கள் மனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் ஆகும். அதைத் தொடர்ந்து இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் அந்தந்த நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் வெளியிடப்படும். 

மேலும் சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். இறுதிப்பட்டியல் வெளியான உடன், அதிகாரப்பூர்வமாக வேட்பாளர்கள், தங்களது வார்டுகளில் சூறாவளி பிரசாரம் மேற்கொள்ள தயார் நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தமிழக தேர்தல் களம் மேலும் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.