இன்றே கடைசி நாள்... காத்திருக்கும் மக்கள்... நல்ல செய்தி சொல்லுமா தமிழக அரசு?
ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரணத் தொகையாக ரூ.2000 மற்றும் 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்குவதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைவதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்கும் விதமாக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.4 ஆயிரம் கொரோனா நிவாரணமாக வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதன் மூலம் 2 கோடியே 10 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டது. கடந்த மாதம் முதற்கட்டமாக ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
தொடர்ந்து 2ம் தவணையாக ரூ2 ஆயிரம், கொரோனா சிறப்பு நிவாரணமாக 14 வகை மளிகை பொருட்களின் தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதற்கான டோக்கன் கடந்த 11ம் தேதி முதல் வீடு, வீடாக வழங்கப்பட்டது. தொடர்ந்து கடந்த 15ம் தேதி முதல் இலவச மளிகை பொருட்கள் மற்றும் ரூ2 ஆயிரம் வழங்கும் பணி ரேஷன் கடைகளில் தொடங்கியது. ஒரு நாளைக்கு 200 பேர் வீதம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரணத் தொகையாக ரூ.2000 மற்றும் 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்குவதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைவதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று குறைவாக இருந்தாலும் அரசு உத்தரவு பிறப்பித்த இரு தினங்களிலேயே விடுபட்ட அனைவருக்கும் கொரோனா நிவாரணம் முழுமையாக வழங்கப்பட்டிருக்குமா? என்பது சந்தேகமே.
தமிழகத்தில் தற்போது மேலும் ஒரு வாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என்றும், மேலும் சில தளர்வுகளை அரசு அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே கடைசி நாளான இன்றும் கொரோனா நிவாரணத் தொகை மற்றும் 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை பெற முடியாதவர்களுக்காக கால அவகாசம் நீட்டிக்கப்படுமா? என மக்களிடம் இருந்து கோரிக்கைகள் எழுந்து வருகிறது.