எடப்பாடி கொள்கை முடிவுகளை எடுக்கக் கூடாதாம்? ஆளுநருக்கு கடிதம் எழுதிய ஜெ.தீபா...!
நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கொள்கை முடிவு எடுக்க தடைவிதிக்கவேண்டும் என ஆளுநருக்கு ஜெ.தீபா கடிதம் எழுதியுள்ளார்.
சட்டப்பேரவையில் ஆளுங்கட்சியினரின் பலம் குறைந்துள்ளதால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை இழந்துள்ளதாக ஜெ. தீபா கூறியுள்ளார்.
இது தொடர்பாக தீபா, ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெற்றுள்ளதைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் ஆளுங்கட்சியினரின் பலம் குறைந்துள்ளது என்றும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை இழந்துள்ளதாக தீபா கூறியுள்ளார்.
எடப்பாடி, பெரும்பான்மை இழந்துள்ளதைக் குறிப்பிட்டு, எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தைக் சுட்டிக்காட்டி உள்ளார். காலம் தாழ்த்தாமல் சட்டப்பேரவையில் உடனடியாக பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும். சட்டப்பேரவையில் முதலமைச்சர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை கொள்கை முடிவு எடுக்க தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு எழுதியுள்ள கடிதத்தல் ஜெ. தீபா கூறியுள்ளார்.