சாதிப்பெயர்களை 2019லேயே நீக்கிட்டாங்க... சர்ச்சையிலிருந்து நழுவும் ஐ.லியோனி..!
தமிழ்நாடு பள்ளிப் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் தமிழறிஞர்கள், கவிஞர்கள், அரசியல் ஆளுமைகள் உள்ளிட்ட தமிழ்த்தலைவர்கள் பெயரின் பின்னால் இருக்கும் சாதிப்பெயர்களை நீக்கியிருக்கிறது தமிழ்நாடு பாடநூல் கழகம்.
பாடப்புத்தகங்களில் தமிழறிஞர்களின் பெயர்களோடு இருந்த சாதிப் பெயர்கள் 2019ம் ஆண்டிலேயே நீக்கப்பட்டுள்ளதாக சென்னையில் தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி விளக்கமளித்துள்ளார். தமிழ்நாடு பள்ளிப் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் தமிழறிஞர்கள், கவிஞர்கள், அரசியல் ஆளுமைகள் உள்ளிட்ட தமிழ்த்தலைவர்கள் பெயரின் பின்னால் இருக்கும் சாதிப்பெயர்களை நீக்கியிருக்கிறது தமிழ்நாடு பாடநூல் கழகம்.
குறிப்பாக, பன்னிரன்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இருக்கும் “பண்டைய காலத்து பள்ளிக்கூடங்கள்” என்ற பாடப்பகுதியில், தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாத ஐயர் என்றிருந்த பெயர் தற்போது உ.வே.சாமிநாதர் என மாற்றப்பட்டுள்ளது. அதேபோல் மீனாட்சி சுந்தரம் பிள்ளை என்பதை மீனாட்சி சுந்தரனார் எனவும், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை என்பதை ராமலிங்கம் எனவும் மாற்றப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்லாமல், தமிழின் முதல் நாவலாசிரியரின் மாயூரம் வேதநாயகம் பிள்ளை என்ற பெயரை வேதநாயகம் எனவும், இலங்கையைச் சேர்ந்த தமிழறிஞரான சி.வை.தாமோதரம் பிள்ளை என்ற பெயரை சி.வை.தாமோதரம் என்றும் பின்னால் இருக்கும் சாதிப்பெயரை நீக்கி தமிழ்நாடு பாடநூல் கழகம் புதிய திருத்தம் மேற்கொண்டுள்ளது.
ஏற்கனவே தமிழ்நாடு அரசால் அரசானை வெளியிடப்பட்டு நடைமுறையில் இருக்கும் சட்டமான, “தமிழ்நாட்டின் சாலைகள், தெருக்கள் மற்றும் அலுவலக கட்டடங்களுக்கு தலைவர்களின் பெயர் சூட்டப்படும்போது அவர்கள் பெயரின் பின்னால் இருக்கும் சாதிப்பெயர் இடம்பெறக்கூடாது” என்ற அறிவிப்பின்படியே இந்த சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தமிழ்நாடு பாடநூல் கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் அனைத்து வகுப்பு பாடப்புத்தகங்களிலும் சாதிகளை நீக்கும், பெயர் திருத்தம் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாடப்புத்தகங்களில் தமிழறிஞர்களின் பெயர்களோடு இருந்த சாதிப் பெயர்கள் 2019ம் ஆண்டிலேயே நீக்கப்பட்டுள்ளதாக சென்னையில் தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி விளக்கமளித்துள்ளார்.