"மக்கள் எதிர்த்தால் மாட்டிறைச்சி தடை சட்டத்தை தமிழக அரசு ஏற்காது - பொடி வைத்து பேசும் கடம்பூர் ராஜு
மாட்டிறைச்சி சட்டத்தை மக்கள் தொடர்ந்து எதிர்த்தால் தமிழக அரசு ஏற்காது என மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
இறைச்சி மற்றும் தோல் பொருட்கள் தயாரிப்புக்காக மாடு, கன்றுக்குட்டி உள்ளிட்ட கால்நடைகளை விற்க மத்திய அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது.
விவசாய தேவைக்காக மாடுகளை விற்கவும், வாங்கவும் கூட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் ஒரு லட்சம் கோடி ரூபாய் இறைச்சி வர்த்தகம் முடங்குகிற நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கு கேரளா, கர்நாடகம், புதுச்சேரி மற்றும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் மத்திய அரசின் இந்த தடைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இதுகுறித்து தற்போது எதுவும் கருத்து கூட இயலாது என தெரிவித்திருந்தார்.
தமிழக எதிர்கட்சிகளும் மாட்டிறைச்சி தடையை எதிர்த்து ஆர்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி நேற்று திமுக சார்பில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட ஸ்டாலின் தமிழக அரசையும், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியையும், அமைச்சர்களையும் கடுமையாக விமர்சித்தார்.
இந்நிலையில், இன்று மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர்ராஜு காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மாட்டிறைச்சி சட்டத்தை மக்கள் தொடர்ந்து எதிர்த்தால் தமிழக அரசு ஏற்காது எனவும், மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதை புரிந்து கொள்ளாமல் ஸ்டாலின் பேசுவதாகவும் தெரிவித்தார்.
மேலும், தி.நகரில் தீயணைப்பு துரையின் முயற்சியால் தீ மற்ற கடைகளுக்கு பரவவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.