Potash fertilizer : பொட்டாஷ் உரம் விவகாரம்… தமிழக அரசிடம் கோரிக்கை விடுக்கும் சசிகலா!!
தமிழகத்தில் நிலவும் பொட்டாஷ் உரம் விலையேற்றத்தை சரிசெய்ய, மத்திய அரசு உர மானியத்தை உயர்த்தி வழங்கவும், தமிழக அரசு உர தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கவும் சசிகலா வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் நிலவும் பொட்டாஷ் உரம் விலையேற்றத்தை சரிசெய்ய, மத்திய அரசு உர மானியத்தை உயர்த்தி வழங்கவும், தமிழக அரசு உர தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கவும் சசிகலா வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகள் தங்களது வேளாண் பயிர்களின் சாகுபடிக்கு மிகவும் அத்தியாவசிய தேவையாக பொட்டாஷ் உரத்தை பயன்படுத்துகிறார்கள். தமிழகத்தில் டெல்டா உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில், 10 லட்சம் ஏக்கருக்கும் அதிகமாக, சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் சாகுபடி செய்துள்ளார்கள். பயிர்களுக்கு தழைச்சத்து கிடைத்து, நன்றாக செழித்து வளர 40 நாட்களுக்குப் பிறகு மேலுரமாக பொட்டாஷ் உரத்தை பயன்படுத்துவது இன்றியமையாதது என்று விவசாயிகள் கருதுகிறார்கள். மேலும், வேளாண்பயிர்களுக்கு ஒரு ஏக்கருக்கு ஒரு மூட்டை வீதம் பொட்டாஷ் உரத்தை பயன்படுத்துகிறார்கள். தமிழகத்தில் இதுவரை ஒரு மூட்டை பொட்டாஷ் உரம் ரூபாய் 1050 க்கு கிடைத்துவந்த நிலையில் தற்போது ரூபாய் 1700 முதல் ரூபாய் 1800 அளவுக்கு விலை உயர்ந்துள்ளதால் மேற்கொண்டு ரூபாய் 650லிருந்து ரூபாய் 750க்கும் அதிகமாக கூடுதல் செலவினம் ஏற்படுவதாக விவசாயிகள் வேதனை படுகின்றனர். மேலும், இந்த பொட்டாஷ் உரம் கிடைப்பதிலும் கடுமையான தட்டுப்பாடு நிலவுவதால், விவசாயிகளுக்கு உரம் கிடைக்காமலும் தவித்து வருகின்றனர்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் விவசாயிகள் தங்கள் பயிர்களை காப்பாற்ற முடியாமல் போய்விடும் என்ற அதிர்ச்சியில் ஏதும் செய்வதறியாது கவலையோடு இருக்கிறார்கள். தமிழகத்தில், விவசாயிகள் ஏற்கனவே, மழை வெள்ளத்தால் தாங்கள் விளைவித்த பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்து, அதனை காப்பற்ற முடியாமல் சிரமப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இது போன்று, எண்ணற்ற இன்னல்களுக்கு மத்தியில் தான் தங்கள் விளைநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள வேளாண்பயிர்களை காப்பாற்ற மிகவும் பாடுபட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இந்த இக்கட்டான சூழ்நிலையில் பொட்டாஷ் உரத்தின் விலை உயர்ந்து இருப்பதும், கடும் தட்டுப்பாடு நிலவுவதும் விவசாயிகளின் தலையில் இடி விழுந்தது போல் உள்ளது. நம் புரட்சித்தலைவியின் ஆட்சிக்காலத்தில் விவசாயம் சார்ந்த ஜீவாதார பிரச்சனைகளில் முன்னதாகவே சிந்தித்து திறமையோடும் மதிநுண்பதோடும் செயல்பட்டதால் தான் விவசாயிகளுக்கு இது போன்று எந்தவித இடர்பாடுகளும் ஏற்படாமல் கவனமுடன் பார்த்துக்கொள்ளப்பட்டது. தமிழகத்தில், டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் 10 லட்சம் ஏக்கருக்கும் அதிகமாக சம்பா தாளடி பயிர் சாகுபடி செய்து வருகின்ற நிலையில் இதற்கு தேவையான உரத்தினை கணக்கிட்டு முன்னதாகவே மத்திய அரசிடம் கேட்டு பெற்று இருப்பு வைக்க தமிழக அரசு தவறி விட்டதாக விவசாயிகள் மிகவும் வேதனைப்படுகிறார்கள்.
ஆகையால் தற்போதைய அரசு இதுபோன்ற செயல்களில் மெத்தனமாக இல்லாமல் விரைந்து செயல்பட்டு இருந்தால் இன்றைக்கு நம் விவசாயிகளுக்கு இந்த அவல நிலை ஏற்படாமல் தவிர்த்து இருக்கலாம். அதேபோன்று, உர விலை ஏற்றத்தால் ஏற்படும் கூடுதல் செலவினத்தைக் குறைக்கும் விதமாக மத்திய அரசு வழங்குகின்ற உரமானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர். தமிழகத்தில் டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் 10 லட்சம் ஏக்கருக்கும் அதிகமாக பயிர் விளைவிக்கின்ற விவசாயிகளின் குடும்பத்தை சேர்ந்த சுமார் 50 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் சம்பந்தப்பட்ட ஜீவாதார பிரச்னையாக நினைத்து, மத்திய அரசு விவசாயிகளின் கோரிக்கையான உர மானியத்தை உயர்த்தி வழங்க முன் வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அதேபோல், தமிழக அரசும், உரதட்டுப்பாடு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும், இது போன்ற ஜீவாதார பிரச்னைகளில் முக்கியத்துவம் அளித்து விரைந்து நடவடிக்கை எடுத்து விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.