ஜாக்டோ ஜியோ போராட்ட வழக்கு..! ஊதிய உயர்வா? முடிவெடுக்க 4, 5 மாசம் ஆகும்..! கோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்..!
அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது தொடர்பாக நிபுணர் குழு ஆராய்ந்து பதிலளிக்கும் எனவும் அதனடிப்படையில் முடிவெடுக்க 4 முதல் 5 மாதங்கள் ஆகும் என தமிழக அரசு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவித்துள்ளது.
பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 7-வது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில் ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அமைப்பான ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கடந்த 7-ம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம் நடத்தியதால் அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, போராட்டத்தை தொடர்ந்து நடத்தியதற்கான விளக்கத்தை அளித்தனர். ஆனால், அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், உடனடியாக பணிக்குத் திரும்புமாறு உத்தரவிட்டனர். அப்படி திரும்பினால், தலைமை செயலாளரை நீதிமன்றத்துக்கு அழைத்து அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை கவனிக்குமாறு உத்தரவிடுமாறு தெரிவித்தனர்.
இதை ஏற்று அரசு ஊழியர்கள் பணிக்குத் திரும்ப ஒப்புக்கொண்டதை அடுத்து தலைமை செயலாளரை நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு வழக்கை இன்றைக்கு ஒத்திவைத்திருந்தது.
இதையடுத்து நீதிபதிகள் சசிதரன் மற்றும் சுவாமிநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று காலை வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.
அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு தொடர்பாக செப்டம்பர் 3-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யப்படும். ஊதிய உயர்வு வழங்குவது தொடர்பாக ஆராய அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழு அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.