tn governor will meet public after general discussion with officials

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், இப்போது தனது அடுத்த கட்ட அதிரடிக்குத் தயாராகி விட்டார். இந்த வாரத் துவக்கத்தில் கோவைக்குச் சென்ற ஆளுநர் புரோஹித், பல்கலைப் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார். பின்னர், அதிரடியாகக் களம் இறங்கி, அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். இதுவரை எந்த ஆளுநரும் செய்யத் துணியாத வேலை இது என்று அவர் மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. 

ஆனால், ஆளுநரின் செயலுக்கு பொதுமக்களிடம் இருந்து பாராட்டு தெரிவித்தும் கடிதங்கள் குவிந்தன. தங்கள் மாவட்டத்துக்கு வாருங்கள் என்று அழைப்பு விடுத்து கடிதங்களும் வந்தனவாம். இதை அடுத்து, மற்ற மாவட்டங்களிலும் சென்று ஆய்வுப் பணிகளில் ஈடுபடப் போவதாக, ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் தெரிவித்திருந்தார். இந்நிலையில அடுத்த கட்ட அதிரடியாக, பொதுமக்களைச் சந்திக்கவுள்ளாராம். 

ஆளுநரின் அதிரடிக்குப் பின்னே மத்திய அரசின் உத்தரவு உள்ளது என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் முழு வேகத்தில் ஆட்சி நிர்வாகத்தை சீரமைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் ஆளுநர் என்கிறார்கள். தான் பொதுமக்களை நேரடியாகச் சென்று சந்திக்க திட்டமிட்டிருப்பதால், அதற்கு மக்கள் பேசும் உள்ளூர் மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதால், தமிழ் மொழியை வேகமாகக் கற்றுக் கொண்டு வருகிறாராம். இதற்கு அவருக்கு உதவியாக மூன்று தமிழாசிரியர்களும் ஒரு பத்திரிகையாளரும் இருந்து வருகிறார்கள் என்றும், அதனாலேயே அவர் கோவையில் அமைச்சர் வேலுமணி முன்னிலையில் பேசியபோது, அடுத்த முறை உங்கள் ஊருக்கு வரும் போது, தமிழில் பேசுவேன் என்று நம்பிக்கையுடன் சொன்னார் என்றும், அதற்கு வேலுமணி புன்னகைத்தார் என்றும் கூறப்படுகிறது.

இப்போது, தமிழக மக்களின் நாடித்துடிப்பை அறிந்து கொள்ளவும், தொழில் முனைவோர் மற்றும் வர்த்தகர்களின் நிலையை அறிந்து கொள்ள அவர்களுடன் அடிக்கடி உரையாடி வருகிறார். தாம் கற்றுக் கொண்ட தமிழ் வார்த்தைகளை அவர்களிடம் சொல்லி, அவர்களிடம் இருந்து கருத்துகளையும் கேட்டறிகிறாராம். 

இப்படி தமிழில் பேசி, புரிந்து கொள்ள இயலும் போது, சாதாரண மக்களையும் சென்று சந்தித்து அவர் பேசுவார் என்று ஆளுநர் மாளிகையில் பரவலாகப் பேசப்படுகிறது. எனவே, ஆளுநரின் அதிரடி திடீர் சுற்றுப் பயணத்தை விரைவில் நாமும் எதிர்பார்க்கலாம். 

புதுச்சேரியில் கிரண் பேடி, துணை நிலை ஆளுநராக இருந்து கொண்டு, இரவில் திடீரென கடற்கரையில் பைக்கில் போய் ரவுண்டு விட்ட மாதிரி, சென்னைக் கடற்கரையிலோ அல்லது அண்ணாசாலையிலோ கூட ஆளுநர் ஒருநாள் திடீர் விசிட் விட்டு மக்களிடம் பேசக் கூடும் என்று கிசுகிசுக்கிறார்கள்.