தமிழக ஆளுநரை அதிரடித்த எடப்பாடியார்... ஜெ. பாணியில் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடுக்கு அரசாணை வெளியிட்டு கெத்து..!
7.5 உள் இட ஒதுக்கீடுக்கு அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்திவரும் ஆளுநருக்காக காத்திருக்காமல் தமிழக அரசே அரசாணையை வெளியிட்டு முடிவை செயல்படுத்தியுள்ளது.
நீட் தேர்வால் பாதிக்கப்படும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவெடுத்தது. சட்டப்பேரவையில் மசோதா கொண்டு வந்து தமிழக அரசு நிறைவேற்றியது. ஆளுநர் ஒப்புதலுக்காக அந்த மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. மசோதாவை அனுப்பி ஒன்றரை மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் ஆளுநர் மசோதா மீது எந்த முடிவையும் எடுக்கவில்லை.
மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கும்படி தமிழக அரசும் எதிர்க்கட்சிகளும் ஆளுநரை வலியுறுத்தி வருகின்றன. ஆனால், மசோதா மீது முடிவெடுக்க இன்னும் 3 முதல் 4 வாரங்கள் கால அவகாசம் தேவை என ஆளுநர் தெரிவித்துள்ளார். மருத்துவக் கலந்தாய்வு தொடங்க உள்ள நிலையில், ஆளுநர் முடிவு தெரியும் வரை மருத்துவ சேர்க்கை நிறுத்தி வைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில் தமிழக அரசு 7.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்க அதிரடியாக அரசாணை வெளியிட்டுள்ளது. ஆளுநர் காலதாமதம் செய்துவரும் நிலையில், அவருக்காகக் காத்திருக்காமல் செயல்படுத்தும் முடிவை (executive decision) அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கடந்த காலங்களில் கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சிக் காலங்களிலும் இதுபோன்ற அரசாணைகள் வெளியிடப்பட்டு, முடிவுகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அதே பாணியில் தற்போது எடப்பாடி அரசும் அரசாணை வெளியிட்டுள்ளது.