#BREAKING முகக்கவசம், சானிடைசர் உள்ளிட்ட 15 பொருட்களுக்கு விலை இதுதான்... தமிழக அரசின் அதிரடி உத்தரவு...!
முகக்கவசம், சானிடைசர் உள்ளிட்ட கொரோனா தடுப்பு பொருட்களுக்கு தமிழக அரசு விலை நிர்ணயம் செய்து உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் தீயாய் பரவி வந்த கொரோனா 2வது அலையின் வேகம் தற்போது சற்றே கட்டுக்குள் வர ஆரம்பித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொற்று கணிசமாக குறைந்து வருகிறது. அதே சமயத்தில் கோவை, நீலகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் தொற்றின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. எனவே அந்த 11 மாவட்டங்களில் மட்டும் அத்தியாவசிய தளர்வுகளுடன் கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
கொரோனா தொற்றைக் கட்டுபடுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் தமிழக அரசு தற்போது அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. கிருமிநாசினி, முகக்கவசம் உள்ளிட்ட 15 நோய் தடுப்பு பொருட்களுக்கு அதிகபட்ச விலையை நிர்ணயிர்த்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
3 அடுக்கு சர்ஜிக்கல் மாஸ்க் ஒன்றுக்கு அதன் தரத்தைப் பொறுத்து அதிக பட்சமாக ரூ.4.50 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 200 மில்லி சானிடைசரை அதிகபட்சமாக 110 ரூபாய்க்கு விற்கலாம் என்றும், N95 முகக்கவசத்தை 22 ரூபாய்க்கு மேல் விற்க கூடாது என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பிபிஇ கிட் எனப்படும் கவச உடைக்கான அதிக பட்ச விலை ரூ.273 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆக்ஸிஜன் மாஸ்க்கின் அதிகபட்ச விலை 54 ரூபாயாகவும், பல்ஸ் ஆக்சிமீட்டரின் விலை 1,500 ரூபாயும் நிர்ணயித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.