கொரோனாவை குறைச்சாச்சு... கருப்பு பூஞ்சை பக்கம் கவனத்தை திருப்பிய தமிழக அரசு... ரூ.25 கோடி ஒதுக்கீடு...!
முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து, கருப்புப் பூஞ்சை நோய் சிகிச்சைக்காக தேவைப்படும் ஆம்போடெரிசின் உள்ளிட்ட அனைத்து உயிர் காக்கும் மருந்துகளையும் வாங்குவதற்கு 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து, கருப்புப் பூஞ்சை நோய் சிகிச்சைக்காக தேவைப்படும் ஆம்போடெரிசின் உள்ளிட்ட அனைத்து உயிர் காக்கும் மருந்துகளையும் வாங்குவதற்கு 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா 2வது அலையைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. தளர்வுகளற்ற ஊரடங்கின் பலனாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் கொரோனா கணிசமாக குறைந்துள்ளது. தற்போது கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மட்டுமே தொற்றின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. எனவே அங்கு மட்டும் சில கட்டுப்பாடுகளுடனும், பிற பகுதிகளில் சில தளர்வுகளுடனும் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வந்த தமிழக அரசு தற்போது கருப்பு பூஞ்சை பக்கம் அதிதீவிரமாக கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது.
தமிழக மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு முயற்சிகளுக்கு உதவும் வகையில் நிதி வழங்க வேண்டுமென முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்ததற்கு இணங்க இன்று வரை 280.20 கோடி ரூபாய் நன்கொடையாக பெறப்பட்டுள்ளது. இவற்றை கொரோனா நிவாரணப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என உறுதியளித்தவாறே தமிழக அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
இதுவரை பெறப்பட்டுள்ள நிதியிலிருந்து, ரெம்டெசிவிர் போன்ற உயிர் காக்கும் மருந்துகளை அரசு மருத்துவமனைகளுக்கு வாங்குவதற்கு 50 கோடி ரூபாயை வழங்கிடவும், சிப்காட் நிறுவனம் மூலம், சிங்கப்பூர் மற்றும் பிற அயல்நாடுகளிலிருந்து ஆக்சிஜன் சிலிண்டர்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் இதர மருத்துவக் கருவிகளை வாங்குவதற்கு 41.40 கோடி ரூபாயையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டிருந்தார். தற்போது கருப்புப் பூஞ்சை நோய் சிகிச்சைக்காக தேவைப்படும் ஆம்போடெரிசின் உள்ளிட்ட அனைத்து உயிர் காக்கும் மருந்துகளையும் வாங்குவதற்கு 25 கோடி ரூபாயை முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.