திரிணாமூல் காங்கிரஸ் – பாஜக கடும் மோதல்..கலவரம்… துப்பாக்கிசூடு… 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு !!
மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க. - திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.இதையடுத்து அங்கு பதற்றம் நிலவுகிறது.
மக்களவைத் தேர்தல் தொடங்கியது முதலே மேற்கு வங்க மாநிலத்தில் டிஎம்சி – பாஜக தொண்டர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது. அவ்வப்போது இரு கட்சித் தொண்டர்களும் ஒருவரை ஒருவர் தாக்கி வருகின்றனர்,
இந்நிலையில் மேற்கு வங்க மாநிலம் 24 பர்கானாஸ் மாவட்டம் கந்தேஷ்கலி என்ற இடத்தில் பா.ஜ.க. கொடிக்கம்பம் மற்றும் பதாகைகளை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் அகற்றினர்.
இதனால் இரு தரப்புக்கும் இடையே நேற்று இரவு கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் பாஜக தொண்டர்கள் 3 பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டதாக அக்கட்சியின் பொது செயலாளர் சயந்தன் பாசு தெரிவித்தார். மேலும் 2 பேர் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகப்படுவதாகவும் அவர் கூறினார்.
இதனிடையே தங்கள் கட்சி தொண்டர் ஒருவரை பாஜக. குண்டர்கள் முதலில் கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியதுடன், அவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதாக அந்த மாநில அமைச்சர் ஜோதிபிரியோ முல்லிக் தெரிவித்தார்.
இரு கட்சியினர் இடையே நடந்த மோதலில் பலர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அங்கு வன்முறை பரவாமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டனர்.தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவி வருகிறது.