"தொகுதி பக்கம் வராதே" - எம்.எல்.ஏவை விரட்டியடித்த திருப்பூர் மக்கள்
அ.தி.மு.க பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த எம்.எல்.ஏ விஜயகுமாரை சிறைபிடித்து பதவியை ராஜினாமா செய்ய கோரியும், தொகுதிக்குள் வராதே வராதே எனவும், அதிமுக தொண்டர்கள் கோஷமிட்டதால் பரபரப்பு நிலவியது.
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் சொக்கனூரில் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. விஜயகுமார், மாநகர மாவட்ட செயலாளர் எம்.எஸ்.எம். ஆனந்தன் ஆகியோர் சென்றனர்.
பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அவர்கள் பின்னர் திருப்பூர் திரும்பினர். சொக்கனூர் பாரதிநகர் அருகே வந்தபோது அ.தி.மு.க. கிளைச்செயலாளர் சங்கீதா தலைமையிலான தொண்டர்கள் காரை வழிமறித்து விஜயகுமாருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
தன் தாயின் இறப்புக்கு கூட வராமல் கூவத்தூரில் சொகுசு விடுதியில் தங்கி குடியும் குடித்தனமாக இருந்த எம்.எல்.ஏவுக்கு தொகுதி பக்கம் வருவதற்கான தகுதி கிடையாது.
மேலும், தொகுதி மக்கள் குடிக்க தண்ணீர் இன்றி தவித்தபோது கூவத்தூரில் உல்லாசமாக இருந்த எம்.எல்.ஏ., எங்களுக்கு தேவையில்லை எனவும், உடனே பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர், எம்.எல்.ஏ விஜயகுமாரின் கார் விடுவிக்கப்பட்டது.