திருப்பரங்குன்றத்தில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி உறுதி! டி.டி.வி தெனாவட்டு பேட்டி…
திருப்பரங்குன்றம் தொகுதியில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி என்று அ.ம.மு.க துணை பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் கூறியுள்ளார். கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி தினகரனிடம் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த டி.டி.வி தினகரன், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அ.ம.மு.க நிச்சயமாக வேட்பாளரை நிறுத்தும் என்று தெரிவித்தார். திருப்பரங்குன்றம் தொகுதிக்கு ஏற்ற வேட்பாளரை தேர்வு செய்து அறிவிக்க உள்ளதாகவும் தினகரன் கூறினார்.
திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.ம.மு.க வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு திருப்பரங்குன்றம் மட்டும் அல்ல தமிழகத்தின் எல்லா தொகுதிகளிலும் அ.ம.மு.கவிற்கு நல்ல ஆதரவு உள்ளதாக தெரிவித்தார். எத்தனை வாக்குகள் வித்தியாசத்தில் அ.ம.மு.க வேட்பாளர் வெல்வார் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த தி னகரன், 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வது உறுதி என்று தினகரன் கூறினார்.
அ.தி.மு.கவிற்கு செல்வாக்கு அதிகரித்து வருவதாக ஓ.பி.எஸ் கூறியதற்கு பதில் அளித்த டி.டி.வி, ஆமாம் அந்த கட்சிக்கு பாகிஸ்தானில் தான் செல்வாக்கு அதிகரித்து வருவதாக கிண்டல் செய்தார். மேலும் சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ வசம் ஒப்படைப்பதற்கும் தினகரன் எதிர்ப்பு தெரிவித்தார். எம்.ஜி.ஆர் உருவாக்கிய சிலை கடத்தல் தடுப்பு பிரிவை எடப்பாடி அரசு கலைக்க முயல்வதாக தினகரன் குற்றஞ்சாட்டினார்.
நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை தான் ஏற்கனவே கூறியது போல் கூட்டணி குறித்து பேசி வருவதாக தினகரன் தெரிவித்துள்ளார். சரியான நேரத்தில் கூட்டணி அறிவிக்கப்படும் என்றும் தினகரன் குறிப்பிட்டுள்ளார். ஒரு சட்டப்பேரவை தொகுதிக்கு 1 லட்சம் பேரை அ.ம.மு.கவில் உறுப்பினர்களாக இணைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தினகரன் தெரிவித்தார். தற்போது ஒரு தொகுதிக்கு சராசரியாக 30 ஆயிரம் பேர் தங்கள் கட்சியில் உறுப்பினர்களாக இணைந்துள்ளதாகவுவும் அவர் குறிப்பிட்டார்.