’தீ குளிச்சா செத்துப்போயிடுவ... போய் டீயை குடிய்யா...’ அதிரவைத்த துரைமுருகன்..!
எத்தனை சோதனைகள் வந்தாலும் நாசுக்காக பேசி பிறரை சிரிக்க வைப்பதில் துரைமுருகன் துரைதான்.
திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனைதான் இப்போதைய தமிழக அரசியலில் ஹாட் டாபிக். இந்த நேரத்தில் துரைமுருகன் ஆடிப்போய் கிடக்கிறார். அதிர்ந்து போய் கிடக்கிறார். விம்மி வெடித்து ஆதரவாளர்களிடம் கண்ணீர் வெடிக்கிறார். சோதனை மேல் சோதனையில் சிக்கித்தவிக்கிறார் என்றெல்லாம் அவரது மனநிலை பற்றி பத்தி பத்தியாக செய்திகள் வந்து குவிகின்றன.
எப்போதும் நக்கல், நையாண்டி அடித்து வரும் துரைமுருகன் கருணாநிதியைக்க்கூட விட்டு வைப்பதில்லை. சீரியசான நேரங்களில் கட்சி நிர்வாகிகளுக்கு மத்தியில் துரைமுருகன் அடிக்கும் ஓரிரு வார்த்தைகள் அங்கே பெரும் சிரிப்பை ஏற்படுத்தும். அப்படித்தான் ரெய்டு நேரத்திலும் டைமிங் சென்ஸ் வார்த்தைகளால் சிரிப்பலையை வரவழைத்திருக்கிறார் துரைமுருகன்.
ரெய்டு குறித்து விளக்கமளிக்க செய்தியாளர்களை சந்தித்தார் துரையார். ‘’ஒரு கட்சியின் மூத்த உறுப்பினர் வீட்டில் சோதனை நடத்தினால் கட்சியில் இருக்கும் மற்ற நபர்கள் பயந்துவிடுவார்கள் என நினைக்கிறார்கள். ஆனால், நாங்கள் இப்போது மேலும் வலிமையாக இருக்கிறோம்.
அதிமுக - பாஜக கூட்டணிக்கு இப்போது தோல்வி பயம் வந்துவிட்டது. இதுபோன்று தேர்தல் நேரத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்துவதால் யாருக்கு பலன் என்ற "அரசியல் அரிச்சுவடி" கூட தெரியாதவர்களாக இவர்கல் இருக்கிறார்கள் என பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது கூட்டத்தில் இருந்த தொண்டன் ஒருவர், திடீரென, ’’தலைவா நான் தீ குளிக்கட்டுமா? சொல்லுங்க தலைவா, இப்பவே நான் தீ குளிக்கிறேன்’ என உணர்ச்சி வயப்பட்டுக் கத்தினார். அப்போது ஒரு நொடி கூட யோசிக்காத துரைமுருகன், ’’தீக்குளிச்சா நீ செத்துப்போயிடுவ. தீ எல்லாம் குளிக்காத, போய் டீ குடிச்சிட்டு வேலையை பாரு’’ என எதார்த்தமாக கூற அங்கு இருந்த இருக்கம் குறைந்து பலரும் சிரிப்பலையில் மூழ்கினர். எத்தனை சோதனைகள் வந்தாலும் நாசுக்காக பேசி பிறரை சிரிக்க வைப்பதில் துரைமுருகன் துரைதான்.