தமிழக மக்களுக்கு முதல்வர் த்ரில்லர் படம் காட்டுகிறார்...! நடிகர் பார்த்திபன்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழக மக்களுக்கு த்ரில்லர் படம் காட்டுவதாக நடிகர் பார்த்திபன் கூறியுள்ளார்.
சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. 8 வழிச்சாலையை செயல்படுத்த தமிழக அரசு தீவிர முனைப்பு காட்டி வருகிறது.
8 வழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்தும் பணியில் அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர். நிலம் கையகப்படுத்துவதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழக மக்களுக்கு த்ரில்லர் படம் காட்டுகிறார் என்று நடிகர் பார்த்திபன் கூறியுள்ளார். இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், 8 வழிச்சாலைக்காக இந்த அரசு, போலீசை வைத்து மக்களை மிரட்டி துன்புறுத்தி நிலத்தை எடுத்து வருகிறது. இது தொடர்பாக
தினந்தோறும் செய்திகள் வருகின்றன.
எங்களைக் கொன்றுவிட்டு எங்களின் பிணங்கள் மீது நடந்து சென்று விளைநிலங்களை எடுத்துக் கொள்ளுங்கள் என்று கதறுகின்றனர். ஒரு மாணவி கழுத்தில் கத்தியை வைத்துக் கொண்டு நிலத்தை அளவீடு செய்யக்கூடாது. மீறினால் அறுத்துக் கொள்வேன் என்கிறார். சிலர் கிணற்றில் குதித்து தற்கொலை முயற்சி செய்கிறார்கள்.
இதை அனைத்தையும் இந்த அரசு வேடிக்கை பார்க்கிறது. மக்களை பதட்டத்தில் வைக்கிறது. மக்களை இவ்வளவு துன்புறுத்தி 8 வழிச்சாலை அவசியமா?
அவ்வளவு வேகமாக போய் என்ன செய்ய போகிறோம்? இந்த திட்டத்திற்கு மாற்றாக வேறு ஏற்பாடு செய்ய வண்டும். நிலத்தை தர விரும்பாத மக்களிடம்
கட்டாயப்படுத்தி நிலத்தை பறிக்கக் கூடாது.
ஸ்டெர்லைட் போராட்டத்தில் பதட்டத்தை ஏற்படுத்திய எடப்பாடி பழனிசாமி அரசு, தொடர்ந்து மக்களை பதட்டத்திலேயே வைத்திருக்கிறது. அடுத்து என்ன
நடக்கும் என்று தமிழக மக்கள் எதிர்பார்க்கும் நிலையில் ஒரு த்ரில்லர் படத்தை காட்டுகிறார் என்று பார்த்திபன் கூறியுள்ளார்.