திருமணமானதை மறைத்து இளம்பெண்களை ஏமாற்றுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்: உயர் நீதிமன்றம்.
வீட்டை விட்டு ஓடிபோய் திருமணமான ஆண்களை மணந்து கொள்ளும் இளம்பெண்கள் துன்புறுத்தப்படுவதை காணமுடிகிறது என வேதனை தெரிவித்தனர்.
திருமணமானதை மறைத்து இளம்பெண்களை ஏமாற்றி திருமணம் செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
காணாமல் போன 10ம் வகுப்பு மாணவியை மீட்டுத் தரக் கோரி, அவரது தாய் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது காணொளி காட்சி மூலம், மாணவியை ஆஜர்படுத்திய போலீஸார், மாணவி ஆடை தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்ததாகவும்,
அங்கு பணியாற்றிய ஏற்கனவே திருமணமான ஒருவரை திருமணம் செய்து கொண்டதாகவும், தெரிவித்தனர். அப்போது நீதிபதிகள், பெற்றோர் சம்மதம் இல்லாமல் வீட்டை விட்டு ஓடிபோய் திருமணமான ஆண்களை மணந்து கொள்ளும் இளம்பெண்கள் துன்புறுத்தப்படுவதை காணமுடிகிறது என வேதனை தெரிவித்தனர்.
திருமணமானதை மறைத்து இளம்பெண்களை ஏமற்றி திருமணம் செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என நீதிபதிகள் அப்போது தெரிவித்தனர். பெற்றோர் சம்மதம் இல்லாமல் வீட்டை விட்டு ஓடிபோகும் இளம்பெண்கள் திருமணமானவர்களை மணந்து கொண்டது தொடர்பாக இதுவரை எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது, திருமணமானதை மறைத்து இளம்பெண்களை ஏமாற்றிய எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுதொடர்பாக அடுத்த வாரம் பதிலளிக்கும்படி அரசு தரப்புக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.