சினிமாவில் ரிட்டையர்டு ஆனவர்கள் அரசியலில் அப்பாய்ண்ட்மெண்ட் ஆக நினைக்கிறார்கள் - திமுக எம்.எல்.ஏ பரிகாசம்...
திருச்சி
சினிமாவில் ரிட்டையர்டு ஆனவர்கள் அரசியலில் அப்பாய்ண்ட்மெண்ட் ஆக நினைக்கிறார்கள் என்று திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் கே.என்.நேரு எம்.எல்.ஏ., கமலையும், ரஜினியையும் பரிகாசம் செய்தார்.
திருச்சி தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் நேற்று நடைப்பெற்றது. இந்தக் கூட்டத்தை தொடங்கி வைத்து தெற்கு மாவட்ட செயலாளர் கே.என்.நேரு எம்.எல்.ஏ. பேசினார்.
அப்போது அவர், "தற்போது கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்க தேர்தல்களில் அனைத்து பதவிகளுக்கும் நாம் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும். அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும். அடுத்து நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு இந்த வெற்றி ஒரு முன்னோடியாக அமைய வேண்டும்.
சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமியின் அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெறவிடாமல் தினகரன் அணியினர் வேலை செய்வார்கள். தினகரன் அணியினரை எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வினர் பார்த்துக் கொள்வார்கள். எனவே, அவர்களை பற்றி நாம் கவலைப்பட வேண்டியது இல்லை.
தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின்தான் முதலமைச்சராக வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். ரஜினிகாந்த், கமல், சீமான் உள்பட ஏழெட்டு பேர் முதலமைச்சர் கனவில் உள்ளனர்.
சினிமாவில் ரிட்டையர்டு ஆனவர்கள் அரசியலில் அப்பாய்ண்ட்மெண்ட் ஆக நினைக்கிறார்கள். அது நடக்காது.
கம்யூனிஸ்டுகள், காங்கிரசு உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஆதரவு நமக்கு உள்ளது. எனவே தி.மு.க. நிச்சயம் வெற்றி பெறும்"என்று அவர் பேசினார்.
இந்தக் கூட்டத்தில், "ஈரோட்டில் வருகிற 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள தி.மு.க. மண்டல மாநாட்டில் திருச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்று கலந்து கொள்வது,
கூட்டுறவு சங்க தேர்தலை முறைகேடுகள் இன்றி நேர்மையாக அதிகாரிகள் நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்வது,
தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை அனைத்து ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கிளை கழகங்களிலும் தி.மு.க. கொடியேற்றி இளைஞர்களின் எழுச்சி நாளாக கொண்டாடுவது" உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.