thoppu venkatachalm questions edappadi palanisamy

தமிழகத்தில் குவாரிகளை அரசே எடுத்து நடத்தும்போது, மணல் தட்டுப்பாடு ஏன் ஏற்படுகிறது என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், போர்க்கால அடிப்படையில் சரி செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தென் மாவட்டங்களில் மணல் குவாரிகளை அரசே எடுத்து நடத்தும். தனியாருக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் ரத்து செய்யப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த மாதம் அறிவித்தார்.

அதன் படி தமிழக அரசு, தற்போது மணல் குவாரிகளை கையகப்படுத்தி, நடத்தி வருகிறது. மாவட்ட நிர்வாகத்தின் தலைமையில் செயல்பட்டு வரும் மணல் குவாரிகளில், மணல் எடுத்து செல்வதற்கு தினமும் நூற்றுக்கணக்கான லாரிகள் நீண்ட வரிசையில் காத்துகிடக்கின்றன.

அரசு நிர்வாகத்தின் கீழ் செயல்படும் இந்த குவாரிகளில் மணல் அள்ளும் பணி சற்று மெத்தனமாக நடைபெறுவதால் கட்டிட நிறுவனங்களும், புதிதாக வீடு கட்டுபவர்களுக்கும் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிமுக எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம், “NEWS FAST” செய்தி குழுவிடம் பேட்டியில் கூறியதாவது:-

எனது தொகுதியில் மணல் தட்டுப்பாடு தலைவிரித்து ஆடுகிறது. இங்கு பல கட்டிடங்கள், கட்டுவதற்காக ஆரம்பித்து, மணல் தட்டுப்பாட்டால் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.

சிலர், குருவி போல பணத்தை சிறுக சிறுக சேமித்தும், நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கடனை வாங்கி சொந்தமாக வீடு கட்டுகின்றனர். அவர்களும், மணல் தட்டுப்பாட்டால், வீட்டை கட்ட முடியாமல் தவிக்கின்றனர்.

இந்த மணல் தட்டுப்பாட்டால், புதிதாக கட்டப்படும் வீடுகள் பாதியிலேயே நிற்கின்றன. அவர்களின் சொந்த வீடு கனவு, சேதமாகிறது. இதையொட்டி கடன் தொல்லை மட்டுமே அவர்களுக்கு மிஞ்சுகிறது.

இதுபோன்ற சிரமங்களையும், கஷ்டங்களை நீக்க மணல் தட்டுப்பாட்டை போக்குவதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி போர்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிமுக இரு அணிகளாக செயல்பட்டு கொண்டு இருக்கிறது. தற்போது இரு அணிகளும் இணைவதற்கான பேச்சு வார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளனர். ஆனால், இதுவரை நடைபெறாமல் உள்ளது.

இதற்கிடையில், எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக சில எம்எல்ஏக்களை வைத்து, ஆலோசனை நடத்துவதாகவும், தனக்கு அமைச்சர் பதவி கேட்பதாகவும் கூறப்படுகிறது. அதன் முன்னோட்டமாக இந்த கோரிக்கையை முன் வைத்திருப்பதாக பொதுமக்கள் கருதுகின்றனர்.