"எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும்" - முதல்வரிடம் தோப்பு அணி கோரிக்கை...!!!
முதலமைச்சரை சந்தித்த பின் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் என தோப்பு வெங்கடாசலம் உள்ளிட்ட 8 எம்.எல்.ஏக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முதலமைச்சர் எடப்பாடிக்கு எதிராக தோப்பு வெங்கடாசலம் தலைமையில் புதிய எம்.எல்.ஏக்கள் அணி உருவாகி வருகிறது. ஏற்கனவே எடப்பாடிக்கு பல்வேறு தரப்பில் இருந்து நெருக்கடிகள் வந்த வண்ணம் உள்ளன.
இதில் எடப்பாடி அணியை சேர்ந்த எம்.எல்.ஏக்களே குடைச்சல் கொடுத்து வருவது தான் முதலமைச்சருக்கு பெரிய நெருக்கடியாகி உள்ளது.
கூவத்தூரில் எம்.எல்.ஏக்கள் இருந்தபோதே தோப்பு வெங்கடாசலம், செந்தில் பாலாஜி உள்ளிட்ட எம்.எல்.ஏக்களுக்கும் எடப்பாடி தரப்பு அமைச்சர்களுக்கும் இடையே முரண்பட்டு ஏற்பட்டதாக தெரிகிறது.
இருந்தாலும் சசிகலா தரப்பு ஏதேதோ வாக்குறுதிகளை கொடுத்து எம்.எல்.ஏக்களை அடக்கியதாக தெரிகிறது. இதையடுத்து சசிகலா கொடுத்த வாக்குறுதிகளை முதலமைச்சராக பதவி ஏற்ற எடப்பாடி செய்ய தவறிவிட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து செம கடுப்பில் இருந்த தோப்பு வெங்கடாசலம் தலைமையில் உருவாகியிருந்த எம்.எல்.ஏக்கள் அணி எடப்பாடி அமைச்சரவைக்கு எதிராக செயல்பட்டு வந்தது.
மேலும் எடப்பாடி தலைமையில் நடக்கும் நிகழ்ச்சியிலும் இவர்கள் கலந்து கொள்வதில்லை.
இதனிடையே அதிருப்தி எம்.எல்.ஏக்கள் சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் தனித்து ஆலோசனை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்ற எடப்பாடி அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு அழைப்பு விடுக்க சொன்னார்.
அதன்படி எம்.எல்.ஏக்கள் தோப்பு வெங்கடாசலம், செந்தில் பாலாஜி, பழனியப்பன், முருகன், பன்னீர்செல்வம், மோகன் உள்ளிட்ட 8 எம்.எல்.ஏக்கள் இன்று முதலமைச்சர் எடப்பாடியை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என தோப்பு வெங்கடாசலம் உள்ளிட்ட 8 எம்.எல்.ஏக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அந்த கோரிக்கையை மனுவாகவும் எழுதி முதலமைச்சரிடம் கொடுத்துள்ளதாக எம்.எல்.ஏக்கள் தெரிவித்தனர்.