thoppu team meeting with edappadi
எடப்பாடி, ஓ.பன்னீர்செல்வம், தோப்பு வெங்கடாச்சலம், தலித் எம்.எல்.ஏ.க்கள் என அதிமுக உடைந்த கண்ணாடிகள் போல பல துண்டுகளாக சிதறிக் கிடக்கிறது.
இவைகளை ஒட்ட வைக்க எடப்பாடி அணி ரொம்பவே மெனக்கெட்டு வருகிறது. தலித் எம்.எல்.ஏ.க்களை எளிதாக வளைத்த எடப்பாடி அணி, தோப்பு வெங்கடாச்சலம் டீமை சமாதானப்படுத்த முடியாமல் தொடர்ந்து திணறி வருகிறது.
எடப்பாடி அரசுக்கு எதிராக சென்னை எம்எல்ஏக்கள் விடுதியில் தோப்பு வெங்கடாச்சலம் தலைமையில், முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பழனியப்பன் மற்றும் 10 எம்எல்ஏக்கள் கடந்த 17 ஆம் தேதி ரகசியக் கூட்டம் நடத்தினர்.

அப்போது கூவத்தூரில் தங்கியிருந்த போது சசிகலா சார்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாதது குறித்து விரிவாகவே விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
3 மாதத்துக்கு ஒரு முறை ஒரு குறிப்பிட்ட அளவு பணம் பலருக்கு வாரியத் தலைவர் பதவி, அமைச்சர் பதவி உள்ளிட்ட கோரிக்கைகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றாததால் அதிருப்தியடைந்த எம்.எல்.ஏ.க்கள். இதற்கு மேலும் பொறுமை காக்க வேண்டாம் என்று தோப்புவிடம் குமுறித் தள்ளினார்களாம்.

எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் நடைபெற்றது ரகசியக் கூட்டம் என்றாலும் இங்கு விவாதிக்கப்பட்ட அனைத்துமே எடப்பாடியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாம். இதனைத் தொடர்ந்து சமாதானம் பேசுங்கள் என்ற உத்தரவு வந்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே தோப்பு வெங்கடாச்சலம், செந்தில்பாலாஜி, பழனியப்பன் மற்றும் 5 எம்.எல்.ஏ.க்கள் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திப்பதற்காக தலைமைச் செயலகம் சென்றுள்ளனர்.
