ஆர்.கே.நகர் அலம்பல்கள்: மதுசூதனனுக்கு போன முறையும் இந்த முறையும் இரட்டை மின் கம்பம்..?
ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நாளை நடைபெறுகிறது. இந்தத் தேர்தல் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்துக்கு பல்வேறு நெருக்கடிகள் இருக்கும் நிலையில், இன்று தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்ட ஜெயலலிதா சிகிச்சை விடியோ, மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
தொகுதி முழுக்க மும்முனைத் தாக்குதல் போல் பணப் பட்டுவாடா நடக்கிறது என்று குற்றம் சாட்டப்பட்ட நிலையில் தினகரன் தரப்பினர் மீதான இந்தக் குற்றச் சாட்டும் இன்று சேர்ந்து கொண்டு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தேர்தல் மீண்டும் தள்ளிப் போகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்ததுள்ளது. ஆனால், தேர்தல் நிச்சயம் நடக்கும் என்று தேர்தல் ஆணையம் உறுதி செய்த நிலையில், நாளை நடக்கிறது இடைத்தேர்தல்.
முன்னர் கடந்த முறை இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த போது, அதிமுக., இரு அணிகளாகப் பிரிந்திருந்தது. அப்போது, ஓ.பன்னீர்செல்வம் அணியில் மதுசூதனன் போட்டியில் இருந்தார். சசிகலா அணியில் முதல்வர் எடப்பாடி ஆதரவில் தினகரன் போட்டியிட்டார். இரட்டை இலை முடக்கப் பட்ட நிலையில், இருவருக்கும் சின்னங்கள் ஒதுக்கப் பட்டன. அதில், மதுசூதனனுக்கு இரட்டை விளக்கு மின் கம்பம் ஒதுக்கப்பட்டது. தினகரனுக்கு தொப்பி ஒதுக்கப்பட்டது.
ஆனால், இரட்டை விளக்கு மின்கம்பம் என்பது இரட்டை இலையைப் போலவே உள்ளது என்று அப்போது தேர்தல் ஆணையத்தின் மீது தினகரன் தரப்பு குற்றம் சாட்டியிருந்தது. இந்த முறை, இந்தக் குற்றச்சாட்டு வேறு வகையில் எதிரொலித்துள்ளது.
மதுசூதனன் என்ற பெயரில் வேறு ஒரு நபரும் சுயேச்சையாக போட்டியிடுகிறார். ஆனால் அவருக்கு ஒதுக்கப்பட்ட சின்னம், அதே இரட்டை மின்விளக்குதான்! இம்முறை இரட்டை இலை சார்பில் அதிமுக., வின் மதுசூதனன் போட்டியிட,வாக்காளர்களைக் குழப்புவதற்காக என்றே மதுசூதனன் என்ற பெயரில் இரட்டை மின்விளக்கு ஒதுக்கப் பட்டிருப்பதை ஏதோ சதி என்றே கூறுகிறார்கள் ஓபிஎஸ் தரப்பினர். ஆக, இப்போதே ஆரம்பித்துவிட்டார்கள்.