12 அமாவாசையை கடந்த இந்த ஆட்சி இன்னும் மூன்றாண்டுகள் நீடிக்கும் - காலரை தூக்கும் அமைச்சர் விஜயபாஸ்கர்...
கரூர்
பன்னிரண்டு அமாவாசையை கடந்த இந்த ஆட்சி இன்னும் மூன்றாண்டுகள் நீடித்து முழுமை பெறும் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டம், கரூர் ஊராட்சி ஒன்றியத்தில் காதப்பாறையில் அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் நேற்று நடைப்பெற்றது.
இந்த முகாமில், போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சிறப்புவிருந்தினராக பங்கேற்று உறுப்பினர் விண்ணப்ப படிவத்தை வழங்கினார்.
அப்போது அவர் பேசியது: “ஜெயலலிதாவின் திட்டங்கள் மக்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்கும் அளவில் உள்ளது. ஜெயலலிதா மறைவுக்குபின் ஒரு அமாவாசைக்குள் முடித்துவிடும் என துரோகிகள், எதிரிகள் கூறினர். ஆனால், 12 அமாவாசையை கடந்து இந்த ஆட்சி தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. மேலும், மூன்றாண்டுகள் தொடர்ந்து நீடித்து இந்த ஆட்சி முழுமை பெறும். அடுத்து வருகிற தேர்தல்களிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும்” என்று அவர் கூறினார்.
அதனைத் தொடர்ந்து மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி, சோமூர், நெரூர் தென்பாகம், நெரூர் வட பாகம், வாங்கல் குப்புச்சிபாளையம், கடம்பங்குறிச்சி, மண்மங்கலம், ஆத்தூர் பூலாம்பாளையம், ஆண்டாங்கோவில் மேற்கு ஆகிய இடங்களில் அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாமை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
பின்னர், செங்குந்தபுரத்தில் அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஜெ.தீபா பேரவையை சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலையில் தங்களை அ.தி.மு.க.வில் இணைத்து கொண்டனர். அதிமுக கட்சியில் சேர்ந்தவர்களை அமைச்சர் வரவேற்று கௌரவித்தார்.
இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட அவை தலைவர் காளியப்பன், நகர செயலாளர் நெடுஞ்செழியன், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் வி.சி.கே.ஜெயராஜ், கரூர் தொகுதி முன்னாள் செயலாளர் திருவிகா, கரூர் ஒன்றிய செயலாளர் என்ஜினீயர் கமலக்கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மணிவண்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.