மாணவிகள் மீது கை வைத்தால் இதுதான் கதி.. சிவசங்கர் பாபாவை கைது செய்ய தனிப்படை டேராடூன் விரைந்தது..
மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுவந்த வழக்கில் சிவசங்கர் பாபாவை கைது செய்ய தனிப்படை போலீசார் டேராடூன் விரைந்துள்ளனர்.
மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுவந்த வழக்கில் சிவசங்கர் பாபாவை கைது செய்ய தனிப்படை போலீசார் டேராடூன் விரைந்துள்ளனர். பள்ளி உரிமையாளர் என்ற தனது செல்வாக்கை பயன்படுத்தி கொண்டு மாணவிகளிடம் பாலியல் வக்கிரத்தில் ஈடுபட்டு வந்த சிவசங்கர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தனிப்படை விரைந்துள்ளது.
சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சுசில் ஹரி பள்ளி மாணவிகளுக்கு அப்பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை கொடுத்ததாக சமூக வலைதளங்களில் புகார் எழுந்த நிலையில், மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிவசங்கர் பாபா மீது 3 புகார்கள் அளிக்கப்பட்டு போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி க்கு மாற்றி கடந்த 13 ஆம் தேதி டி.ஜி.பி திரிபாதி உத்தவிட்டார்.இந்நிலையில் மாணவிகள் மூலம் பெறப்பட்ட 3 புகார்களின் அடிப்படையில் சுசில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீதான பொக்சோ வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி போலீசார் துவங்கியுள்ளனர்.
சி.பி.சி.ஐ.டி ஐ.ஜி ஜோஷி நிர்மல் குமார் உத்தரவின் பேரில் எஸ்.பி விஜயகுமார் தலைமையில் விசாரணை அதிகாரிகளாக டி.எஸ்.பி குணவர்மன் மற்றும் ஆய்வாளர் ஜெயசங்கர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் முதற்கட்டமாக மாமல்லபுரம் காவல் நிலையத்தில் இருந்து வழக்கு தொடர்பான புகார், முதல் தகவல் அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களை பெற்று புகார் அளித்தவர்களிடம் ரகசிய விசாரணை நடத்தி அவர்களின் வாக்குமூலங்களை பெற சி.பி.சி.ஐ.டி- யினர் திட்டமிட்டுள்ளனர். அதேபோல் காவல்துறை மற்றும் குழந்தைகள் நல உரிமை பாதுகாப்பு ஆணையம் அனுப்பிய சம்மனுக்கு ஆஜராகாமல் சிவசங்கர் பாபா தவிர்த்து வந்த நிலையில், அவர் டேராடூன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார் என அவரது தரப்பில் ஆதாரங்களை சமர்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிவசங்கர் பாபாவை கைது செய்ய தனிப்படை போலீசார் டேராடூன் விரைந்துள்ளனர். சிபிசிஐடி டிஎஸ்பி குணவர்மன் தலைமையிலான தனிப்படையினர் டேராடூன் விரைந்துள்ளனர். சிவசங்கர் பாபா வெளிநாடு தப்பிச்செல்லாமல் இருக்க விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.