Annapoorani: அன்னபூரணி முரட்டு பக்தர்கள் செய்த காரியம்... இதுதான் மதுரைக்கார குசும்பா..?
மதுரையை சேர்ந்த ஒருவர் அன்னபூரணிக்கு காலண்டரே அடித்து இருக்கிறார்.
உலக மக்களை காத்தருள ஆதிபராசக்தி அன்னபூரணி 'அம்மா’வாக அவதாரம் எடுத்துள்ளதாக கூறி செங்கல்பட்டை சுற்றியுள்ள பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இந்த போஸ்டர் சமூக வலைதளங்களிலும் வைரலானது. ஆதிபராசக்தி அன்னபூரணி அம்மா என்ற பேஸ்புக் பக்கத்தில் தன்னை ஆதிபராசக்தியின் அவதாரம் என கூறிக் கொள்ளும் அவருக்கு பக்தி பரவசத்தில் பொதுமக்கள் பூஜை செய்யும் வீடியோக்கள் வைரலாகின
.
இந்த நிகழ்வு வைரலானவுடன் இன்னொரு வீடியோவும் வைரலானது. அதாவது அன்னபூரணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் லட்சுமி ராமகிருஷ்ணனின் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் வந்தவர். மற்றொரு பெண்ணின் கணவருடன் உறவு வைத்திருந்ததாக அன்னபூரணி மீது குற்றம்சாட்டப்பட்ட நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வாசுகி திருமண மண்டபத்தில் ஜனவரி 1ஆம் தேதி அன்னபூரணி பக்தர்களுக்கு அருள் வாக்கு சொல்ல இருப்பதாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இந்த போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து அந்த மாவட்ட போலிசார் திருமண மண்டப உரிமையாளரை எச்சரித்து அந்த நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கக் கூடாது என தெரிவித்தனர்.
இந்த நிலையில் தனியார் யூடியூப் சேனலுக்கு அன்னபூரணி பேட்டியளித்ததில், ’’என்னை தனிப்பட்ட உடலாக பார்ப்பதால் தான் நான் இதற்கு முன்னர் என்ன செய்து கொண்டிருந்தேன், நான் யார் என்றெல்லாம் கேட்க நினைக்கிறீர்கள்.
நான் தான் சொல்கிறேனே, இங்கு சக்தியாக இருக்கிறேன் என்று, என்னை சாதாரணமாக நினைத்து கொண்டிருக்கிறீர்கள் என ஆக்ரோஷமாக கத்திக் கொண்டே, நான் கோபப்படவில்லை, உங்களுக்கு புரியவில்லை. இது உணரக்கூடிய விஷயமில்லை. நான் என்ன செய்கிறேன் என்பதை உணர்ந்தால் தான் புரிந்து கொள்ள முடியும். எனத் தெரிவித்தார். தனக்கும், தனது பக்தர்கள் உயிருக்கும் ஆபத்து இருப்பதாக காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.
அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூகவலைதளங்களில் கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மதுரையை சேர்ந்த ஒருவர் அன்னபூரணிக்கு காலண்டரே அடித்து இருக்கிறார். அதில் அகிலம் ஆளும் ஆத்தா அன்னபூரணி முரட்டு பக்தர்கள் என அச்சிடப்பட்டுள்ளது.