மக்களின் உயிரை காக்க ஒரே வழி இதுதான்.. மேலும் ஒருவார காலம் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு.
நோய்த்தொற்று பரவலாக பல மாவட்டங்களில் கட்டுக்குள் வந்துள்ளபோதிலும், கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர, ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மட்டும் நோய்த்தொற்று பரவல் தொடர்ந்து அதிகமாக இருந்து வருகிறது.
தமிழ்நாட்டில் ஊரடங்கு சில தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி அறிக்கையின் விவரம்: கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்காக இந்திய அரசின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாட்டில் 25-3- 2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் ஊரடங்கு உத்தரவு குறிப்பிட்ட சில தகவல்களுடன் அமலில் இருந்து வருகிறது. இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தில் 27-5-2021 அன்று வெளியிடப்பட்டுள்ள ஆணையில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் 30-6-2021 வரை தொடர்ந்து அமலில் இருக்கும் என ஆணையிடப்பட்டுள்ளது.
மேலும் நோய் தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள், மருத்துவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனையின் போது தெரிவிக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையில், கொரோனா பெரும் தொற்று நோய் பரவலை கட்டுப்படுத்த கடந்த 24-5-2021 முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கு 7-6-2021 அன்று காலை 6 மணிக்கு முடிவுக்கு வரும் நிலையில், நோய்த்தொற்றின் தன்மையை மாவட்ட வாரியாக ஆய்வு செய்தும், நோய்த்தொற்று பரவாமல் தடுத்து மக்களின் விலைமதிப்பற்ற உயிர்களைக் காக்கும் நோக்கத்தில் இந்த முழு ஊரடங்கு 7-6-2021 முதல் 14- 6 -2021 காலை 6 மணிவரை சிலர் தளர்வுகளுடன் மேலும் ஒருவார காலத்திற்கு நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளேன்.
இந்த ஊரடங்கு என்பது அனைத்து மாவட்டங்களிலும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும், தமிழ்நாட்டில் தற்போது கொரோனா நோய்த்தொற்று பரவலாக பல மாவட்டங்களில் கட்டுக்குள் வந்துள்ளபோதிலும், கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர, ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மட்டும் நோய்த்தொற்று பரவல் தொடர்ந்து அதிகமாக இருந்து வருகிறது. எனவே இம்மாவட்டங்களில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், அதேசமயம் பொது மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்துடன், தற்போது ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன் மேலும் 11 மாவட்டங்களில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் 7-6-2021 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.