திமுக அரசு என்று சொல்வதைவிட சமூக நீதி அரசு என்று சொல்வதே சரி... தெறிக்கவிடும் திருமாவளவன்.!
தமிழகத்தில் திமுக ஆட்சி சிறப்பாக உள்ளது. இதை திமுக அரசு என்று சொல்வதைவிட சமூக நீதி அரசு என்று சொல்வதே பொருத்தமானது விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “நீட் தேர்வு தமிழக மாணவர்களை பழி வாங்கி கொண்டிருக்கிறது. எனவே நீட் தேர்வு, வேளாண் சட்டத்துக்கு எதிராகவும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் 20-ஆம் தேதி அவரவர் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடைபெற உள்ளது. மோடி அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து நடைபெறும் இந்தப் போராட்டத்தில் எல்லோரும் பங்கேற்க வேண்டும்.
தமிழக ஆளுநராக பொறுப்பேற்றுள்ள ஆர்.என். ரவி மீது பல விமர்சனங்கள் உள்ளன. நாகாலாந்து மாநிலத்தில் அவருக்கு எதிராக மாணவர்கள் உள்பட பல அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. அவர் தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டதில் உள்நோக்கம் உள்ளது. எனவேதான் அவரது நியமனத்தை திரும்பபெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் ஆளுநர் பதவியேற்பு விழாவுக்கு எனக்கு அழைப்பு வந்தது. ஆளுநர் நியமனத்திலேயே உடன்பாடு இல்லாத நிலையில், அந்த விழாவில் பங்கேற்கவில்லை.
அதிமுக ஆட்சியில் அடி முதல் நுனி வரை ஊழல் தலைவிரித்தாடியது. இன்றைக்கு அதெல்லாம் வெளிச்சத்துக்கு வருகிறது. இதை அதிமுகவே அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. அவர்களிடமிருந்து எதிர்ப்போ விமர்சனமோ வரவில்லை. 9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுடன் இணைந்து போட்டியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் திமுக ஆட்சி சிறப்பாக உள்ளது. இதை திமுக அரசு என்று சொல்வதைவிட சமூக நீதி அரசு என்று சொல்வதே பொருத்தமானது” என்று திருமாவளவன் தெரிவித்தார்.