தைரியமிருந்தால் என் வீட்டுக்கு ரெய்டுக்கு வாருங்கள் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்தார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் மகள் செந்தாமரையின் வீட்டிலும் அவருடைய கணவர் சபரீசனின் அலுவலகத்திலும் அவருடைய நண்பர்களின் வீடு, அலுவலகங்களிலும் இன்று வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இதேபோல கலசப்பாக்கம் தொகுதியில் பணப் பட்டுவாடா புகார் எழுந்தது. இதனையடுத்து திருவண்ணாமலை திமுக எம்.பி. அண்ணாதுரை வீட்டிலும் வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டது. இன்னொரு புறம் கரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, அவருடைய சகோதரர் வீடு உள்பட 4 இடங்களில் வருமான வரித்துறையில் சோதனையில் ஈடுபட்டனர்.
திமுகவினருக்கு சொந்தமான இடங்களில் ஒரே நாளில் இந்த ரெய்டு நடந்ததால், திமுகவினர் கொந்தளித்து வருகின்றனர். இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று தேர்தல் பிரசாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது ரெய்டு பற்றி அவர் பேசுகையில், “இன்று காலையில் என்னுடைய சகோதரி செந்தாமரையின் வீட்டில் ஐ.டி. ரெய்டு நடைபெற்றுள்ளது. நான் ஒரு சவால் விடுக்கிறேன். என்னுடைய வீட்டு முகவரியைத் தருகிறேன். எண்.25/9, செனடாப் ரோடு, சித்தரஞ்சன் சாலை. தைரியமிருந்தால் என் வீட்டுக்கு ரெய்டுக்கு வாருங்கள்” என்று உதயநிதி ஸ்டாலின் பேசினார்.