விடியா அரசின் ஆட்சியின் கீழ் தமிழகத்தில் தற்போது நிலவும் சட்டம் ஒழுங்கின் சீரழிவிற்கு இதுவே சாட்சி என காட்டமாக எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார்.
தமிழக பாஜகவின் தலைமை அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசபட்டது கடும் கண்டனத்துக்குரியது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னையில் தியாகராயநகர் பகுதியில் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயம் உள்ளது. இந்த அலுவலகத்தில் நள்ளிரவு 1 மணியளவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் நந்தனத்தை சேர்ந்த ரவுடி கர்த்தா வினோத் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். தீவிரமாக அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, நீட் தேர்வுக்கு பாஜக தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருவதாகவும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பெட்ரோல் குண்டு வீசியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தரப்பில் கூறியுள்ளனர். இந்த சம்பவத்திற்கு பாஜக மற்றும் அதிமுக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து ஆளுங்கட்சி மீது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- தமிழக பாஜகவின் தலைமை அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசபட்டது கடும் கண்டனத்துக்குரியது. விடியா அரசின் ஆட்சியின் கீழ் தமிழகத்தில் தற்போது நிலவும் சட்டம் ஒழுங்கின் சீரழிவிற்கு இதுவே சாட்சி என காட்டமாக எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக ஆளுங்கட்சியான திமுக மீதான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து அறிக்கை மூலமும், பேட்டியின் மூலம் விடாமல் எடப்பாடி பழனிசாமி சுட்டிகாட்டி வருகிறார்.
