டிடிவி-ன் வெற்றிக்கு 6 அதிரடி காரணங்கள் இதுதான்...! ஏசியாநெட் எஸ்குளூசிவ் அலசல்...! அதிர்ச்சி தகவல்கள்!
சென்னையின் மிகப் பழமையான பகுதிகளில் ஒன்றான ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி வாசிகள், அளித்த வாக்குகள் தமிழகத்தில் மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவையுமே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.
காரணம்... அனைவரும் அறிந்த சசிகலாவின் அக்காள் மகன் டிடிவி தினகரனின் இமாலய வெற்றிதான். டிடிவி தினகரன், வெற்றி பெறுகிறார் என்பது குக்கர் சின்னம் அறிவித்த முதல் நாளில் இருந்தே அரசல் புரலாக பேசப்பட்டது. கடந்த முறை நிறுத்தப்பட்ட இடைத்தேர்தலின்போது, டிடிவி தரப்பில் வாரி வழங்கப்பட்ட சலுகைகளினால் அகம் மகிழ்ந்து போயிருந்த ஆர்.கே.நகர் வாசிகள், டிடிவிக்கு நன்றி கடன் செலுத்தும் விதமாக மீண்டும் ஒரு தேர்தல் அறிவிக்கப்பட்டது.
குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட டிடிவியை, வாழ்வா? சாவா? என்ற ரீதியில் எதிர்கொண்டது இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். அதிமுக. இதுவொருபுறம் இருக்க 10 கட்சிகளோடு கைக்கோர்த்துக் கொண்டு களத்தில் குதித்தது திமுக. இவை அனைத்தையும், அறிமுகம் இல்லாத குக்கர் சின்னத்தைக் கொண்டு பொடிப்பொடியாக்கி உள்ளார் டிடிவி தினகரன்.
டிடிவி தினகரனின், இந்த பிரம்மாண்ட வெற்றிக்கு என்ன காரணம்? அல்லது உண்மையான காரணம் என்ன? என்பது குறித்து மண்டையைப் போட்டு உருட்டிக் கொண்டுள்ளனர் அரசியல் கட்சியினரும் மற்றும் அரசியல் ஆய்வாளர்களும். ஆர்.கே.நகரில் மொத்தம் பதிவான, 1,76,890 வாக்குகளில் 89,013 வாக்குகளை டிடிவி தினகரன் பெற்றுள்ளார்.
அடுத்து வந்த மதுசூதனன், கிட்டத்தட்ட 50 சதவிகித வாக்குகள் குறைவாக அதாவது 48,306 வாக்குகளை மட்டுமே பெற்று, 40,707 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
இந்த நிலையில் தினகரனின் வெற்றிக்கு உண்மையான காரணம் என்ன என்று ஆளாளுக்கு ஒரு திசையில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், ஏசியாநெட் தமிழ் ஆய்வுக்குழு ஆர்.கே.நகர் களத்தில் நேற்று இறங்கி முழுவதுமாக வலம் வந்தது. இதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளி வந்துள்ளன.
டிடிவியின் வெற்றிக்கு முக்கியமான அந்த 6 காரணங்கள்:-
1) மார்ச் மாதம் நிறுத்தப்பட்ட இடைத்தேர்தலில், அதிமுக அமைச்சர்களும், மன்னார்குடி உறவினர்களும் கணக்கு வழக்கு பார்க்காமல் பணம் மற்றும் நகைகளை வாரி இறைத்தது.
2) 40 வயதுக்குட்பட்டவர்களுக்கு பாஜக மீதான எதிர்ப்பு; மோடியை, திமுகவைவிட டிடிவி நன்றாக எதிர்க்கிறார்.
3) தொகுதி வாசிகள் கிட்டத்தட்ட 40 ஆயிரம் பேரை வேலைக்கு ஆளெடுத்து, அவர்களுக்கு தினமும் 300 ரூபாய் சம்பளம் வழங்கி, எதிர்தரப்பு ஆட்களை தன்னுடைய ஆட்களாக வேலைக்கு அமர்த்திக் கொண்ட செந்தில் பாலாஜியின் வியூகம்.
4) மண்ணின் மைந்தரான பெரம்பூர் தொகுதி வெற்றிவேல், தேர்தல் நிறுத்தப்பட்டபோதும் கடந்த 5 மாதங்களாக குறி வைத்து வேலை செய்த விதம்.
5) கடந்த முறை தேர்தலின்போது தினகரன் தரப்பில் கொடுக்கப்பட்ட பணம் ஸ்கூல் பீஸ் கட்ட ஏதுவாக இருந்தது. இது தாய்மார்களிடையே மிக பெரிய சென்ட்டிமெண்டாக மாறியது.
6) வலுவான திமுகவில் பலமான வேட்பாளரை நிறுத்தாதது. (குறிப்பு... வேட்பாளருக்கும் பணமில்லை, செலவு செய்யவும் பணமில்லை. திமுகவின் கஞ்சத்தனம்).
மேற்கண்ட 6 காரணங்களோடு அடிமேல் அடிவாங்கிய தினகரன், அசராமல் மேற்கொள்ளும் மீடியா அப்ரோச். அசால்டாக பேட்டியளிக்கும் விதம் போன்றவை பெரும்பாலானோரை கவர்ந்து, பரவலாக விவாதிக்கும் அளவுக்கு ஒரு முக்கியமான விஷயமாக உருவெடுத்து விட்டது. இதுபோக, வேட்பாளர் தேர்வில் எதிர்கட்சிகள் கோட்டைவிட்டு விட்டதும் முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.
எது எப்படியோ? கருணாநிதி, ஜெயலலிதாவை தவிர்த்து பணநாயகத்தோடு சரியாக வியூகமும் கைகோர்த்துக் கொண்டால், யார் வேண்டுமானாலும் தமிழகத்தில் வெற்றி பெறலாம்; ஆட்சியைக் கைப்பற்றலாம் என்பது மீண்டும் ஒரு முறை ஆர்.கே.நகர் வாசிகளால் நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஊழல்... முறைகேடுகள்... முரண்பாடுகள்... எதுவாக இருந்தாலும் தங்களுக்கு கவலை இல்லை. தங்களுக்கு எம்ஜிஆர் போன்று, ஜெயலலிதா போன்று, கருணாநிதி போன்று நன்கு பேசக்கூடிய வசீகரமான தலைமையே தேவை என்பதை ஆர்.கே.நகர் வாசிகள் அறுதியிட்டு கூறியிருப்பது மட்டும் தெள்ளத் தெளிவாத் தெரிகிறது.