"இரட்டை இலை முடக்கப்பட்டதற்கு பா.ஜ.க.வே காரணம்" - திருநாவுக்கரசர் புது கதை
ஆர்கே நகர் இடை தேர்தலில், இரட்டை இலை முடக்கப்பட்டதற்கு, பாஜகவே காரணம் என திருநாவுக்கரசர் கூறினார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் ஏற்பட்ட மழை வெள்ளம், வார்தா புயல் பாதிப்பு மற்றும் வறட்சிகாக, மத்திய அரசு வழங்கி நிவாரண நிதி போதுமானது அல்ல. யானை பசிக்கு சோளப்பொரி போல் உள்ளது. தமிழகத்தில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. அதை சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை செய்பவர்களுக்கு உரிய சம்பளம் வழங்க வேண்டும்.
‘ஹைட்ரோ கார்பன் திட்டம் தமிழக அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் செயல்படுத்தப்படாது’ என மத்திய அமைச்சர்கள் கூறுகின்றனர். இதுபற்றி தமிழக அரசு கருத்து தெரிவிக்க வேண்டும்.
பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு இலங்கை கடற்படையினரால் 130 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. எனவே, அதற்கான நஷ்டஈடு தொகையை இலங்கையிடம் இருந்து மத்திய அரசு பெற்று தர வேண்டும்.
வறட்சியால் உயிரிழந்த விவசாயிகளுக்கு நிவாரணம், பயிர்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும், விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 3ம் தேதி விவசாயிகள் போராட்டம் நடத்துகிறார்கள். அவர்களின் இந்த போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் முழுவதும் வழங்குவோம்.
ஆர்கே நகர் இடை தேர்தலில், காங்கிரஸ் தரப்பில் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் நானும், முன்னணி தலைவர்களும், திமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வோம்.
ஆர்கே நகர் இடை தேர்தலில், இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் என பாஜக தலைவர்கள் கூறினர். எனவே, இதில் பாஜகவின் சதி இருப்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. தமிழகத்தில் எந்த சூழ்நிலையிலும் பா.ஜ.க. காலூன்ற முடியாது.
ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மத்தை வெளிக்கொண்டு வர நீதி விசாரணை நடத்த வேண்டும். தமிழகத்தில் வறட்சி மற்றும் வார்தா புயல் பாதிப்புக்கு கூடுதல் நிவாரணம் வழங்கக்கோரி காங்கிரஸ் சார்பில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு விரைவில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.