thirumavalavan pressmeet about muthukrishnan
மாணவர்கள் மாணவிகளை சாதியின் பெயரால் இழிவுபடுத்தும் நிலை தொடர்வதாக விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் சாமிநாத புரத்தை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவர் டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலை கழகத்தில் எம்.பில் நவீன வரலாறு படித்து வந்தார்.
இந்நிலையில், முத்துகிருஷ்ணன் பல்கலை கழக விடுதியில் தூக்கில் பிணமாக கிடந்தார். இதை பார்த்த சக மாணவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து வந்த டெல்லி போலீசார் முத்துகிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முத்துகிருஷ்ணன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், இதுகுறித்து நீதி விசாரணை அமைக்க வேண்டும் எனவும் அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சென்னை விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது :
முத்துகிருஷ்ணன் மரணத்தில் சந்தேகம் உள்ளது.மரணம் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்.
டெல்லியில் இருந்து மாணவரின் உடலை கொண்டு வர தமிழக அரசு பொறுப்பேற்று கொள்ள வேண்டும்.
மாணவர்கள் மாணவிகளை சாதியின் பெயரால் இழிவுபடுத்தும் நிலை தொடர்கிறது.முத்துகிருஷ்ணன் குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும்

மேலும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.முத்துகிருஷ்ணன் மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.
கல்வியை காவிமயமாக்கும் நிலை தான் தொடர்கிறது.மாணவர்கள் மத்தியில் வெறுப்புகளை விதைக்க வேண்டாம்.
சரவணன் என்ற மாணவர் எய்ம்ஸ் கல்லூரியில் படித்து வந்தவர்.அவரின் மரணம் கொலை தான் என நிரூபிக்கப்பட்டுள்ளது.

வெளி மாநிலங்களில் படிக்கும் தமிழக தலித் மாணவர்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் முத்துகிருஷ்ணன் மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து இறுதி முடிவு இன்றே வெளியாகும்.இவ்வாறு அவர் பேசினார்.
