thirumavalavan explained why support dmk
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மட்டுமல்லாது சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களிலும் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்ததது ஏன் என திருமாவளவன் விளக்கமளித்துள்ளார்.
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு கடந்த ஓராண்டாக காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் டிசம்பர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது.
திமுக சார்பில் ஏற்கனவே போட்டியிட்ட மருது கணேஷே இந்த முறையும் போட்டியிடுகிறார். திமுக செயல் தலைவர் ஸ்டாலினின் வேண்டுகோளை ஏற்று திமுக வேட்பாளரை ஆதரிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்திருந்தார். மேலும் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களிலும் திமுகவுடன் கூட்டணி தொடரும் என அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், திமுக வேட்பாளர் மருது கணேஷ், தனக்கு ஆதரவு தெரிவித்ததற்காக திருமாவளவனை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், திமுகவிற்கு ஆதரவு அளித்தது ஏன்? என விளக்கமளித்தார்.
மதச்சார்பற்ற வாக்குகள் சிதறிவிடக்கூடாது என்பதற்காகவே திமுகவுக்கு விடுதலை சிறுத்தைகள் ஆதரவளிக்கிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் என்பது வெறும் தேர்தல் மட்டுமல்ல. இது மதவாத சக்திக்கு எதிரான போராட்டம் ஆகும் என திருமாவளவன் தெரிவித்தார். மேலும் மருதுகணேஷை ஆதரித்து வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட உள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடைபெறும் அதிமுக ஆட்சியை மத்திய பாஜக அரசே வழிநடத்துவதாகவும் அதிமுகவை பயன்படுத்தி தமிழகத்தில் பாஜக காலூன்ற நினைப்பதாகவும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. அந்த குற்றச்சாட்டை முன்வைப்பதில் திருமாவளவனும் ஒருவர். எனவே அதனடிப்படையில், பாஜகவிற்கு எதிரான வாக்கு வங்கிகள் சிதறிவிடக்கூடாது என்பதற்காகவே திமுகவுக்கு ஆதரவு என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
