விழுப்புரத்தில் உதயசூரியன் சின்னத்தில் போட்டி ஏன்..? திருமாவளவன் சொன்ன புதிய காரணம்!
சிதம்பரம் தொகுதியில் தனி சின்னத்தில் விசிக தலைவர் திருமாவளவன் போட்டியிடும் நிலையில், விழுப்புரத்தில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது பற்றி புதிய காரணத்தைக் கூறியுள்ளார்.
விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் விசிக வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து திண்டிவனத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் திருமாவளவன் பேசினார். அப்போது விழுப்புரம் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது ஏன் என்பது குறித்து பேசினார்.
“திமுக தலைமையிலான கூட்டணி பரிசுத்தமான கூட்டணியாக அமைந்துள்ளது. நம்மை எதிர்க்கும் கூட்டணி சீட்டும் நோட்டும் பேரம் பேசி உருவாக்கப்பட்டது. பாஜகவின் கிளை அமைப்பாக அதிமுக மாறிவிட்டது. விழுப்புரத்தில் போட்டியிடும் வேட்பாளர் நாடறிந்த எழுத்தாளர். அவர் இங்கே உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். அவர் ஏன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார் என்ற கேள்வி எழலாம்.
வெற்றி வாய்ப்பை இழந்து விடக்கூடாது என்ற ஒரே காரணத்தால்தான் உதயசூரியன் சின்னத்தில் விழுப்புரத்தில் போட்டியிடுகிறோம். திமுகவுக்கும் விசிகவுக்குமான உறவு தேர்தல் உறவு அல்ல. எங்கள் உறவு என்பது கொள்கை ரீதியிலானது. 'ஓட்டுச்சாவடிகளை கைப்பற்றுங்கள்' எனப் பேசிய தலைவரை பார்த்துகொண்டிருக்கிறீர்கள். ஓட்டுச் சாவடிகளை கைப்பற்றினால், திமுகவினர் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பார்களா?இந்தத் தேர்தலில் மு.க. ஸ்டாலினின் நோக்கம், ரவிக்குமாரை மட்டும் வெற்றி பெற செய்வது அல்ல; ராகுலை பிரதமராக்குவதும்தான்.” என்று திருமாவளவன் பேசினார்.
கடந்த 2009-ம் ஆண்டில் திமுக கூட்டணி சார்பில் விழுப்புரத்தில் போட்டியிட்ட விசிக, வெறும் 2500 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.