கோட்சே இந்து பயங்கவாதின்னா… மகாத்மா காந்தி ஒரு இந்து தீவிரவாதி… அடுத்த பிரச்சனையைப் பற்ற வைத்த திருமாவளவன் !!
சென்னையில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டத்தில் பேசிய விசிக தலைவர் தொல்.திருமாவளவன், கோட்சே ஒரு இந்து பயங்கரவாதி என்றால், மகாத்மா காந்தி ஒரு இந்து தீவிரவாதி என சர்ச்சைக்குரிய வகையில் பேசி மீணடும் ஒரு பிரச்சனையை இழுத்துள்ளார்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்றும் அவர் பெயர் நாதுராம் கோட்சே என்றும் தெரிவித்தார். கமலின் இந்தப் பேச்சுக்கு கடும் கண்டனம் எழுந்தது. அவர் மீது 70க்கும் மேற்பட்ட இடங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கை முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற தமிழீழ படுகொலையின் 10-ம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை அசோக்நகரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் பங்கேற்றுப் பேசிய திருமாவளவன், ஈழத்தமிழர் பிரச்சினையில் தீர்வு காண வேண்டும் என்றால் இந்தியாவில் உள்ள தமிழ் அமைப்புகள், இலங்கையில் உள்ள தமிழ் அமைப்புகள், உலகம் எங்கும் பரவி கிடக்கும் தமிழ் அமைப்புகள் இடையே ஒருங்கிணைந்த செயல்திட்டம் உருவாக்க வேண்டும் என தெரிவித்தார்.
பாஜகவின் சனாதன கொள்கையில் தீவிர எதிர்ப்பு கொண்டதால் தான் நான் கமல்ஹாசனின் கருத்தை ஆதரித்தேன். கமல்ஹாசன் கோட்சேவை தீவிரவாதி என்று கூறியதற்கு ஒருபடி மேல் சென்று பயங்கரவாதி என்று கூறியிருக்க வேண்டும்.
காந்தியும் ஒரு இந்து தீவிரவாதி தான். அவர் மூச்சுக்கு 300 முறை ஹேராம் என்பார். அவருக்கு முற்பிறவி, கர்மவினை மீது நம்பிக்கை உண்டு. கர்மவினை மீது யார் நம்பிக்கை கொண்டாலும் அவர் ஒரு இந்து தீவிரவாதி தான். காந்தியை கொன்ற கோட்சே ஒரு இந்து பயங்கரவாதி என்று பேசி பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.