வெறிநாய்களை விட்டே 'இவர்களை' கடித்து குதற வைக்கணும்: நடிகை குஷ்பு குமுறல்
டெல்லி அருகே உள்ள மதரசாவில் 17 வயது சிறுவன் ஒருவன், 10 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தான். மதராசாவில் பணியாற்றும் மவுலவி இது குறித்து அறிந்தும் போலீசாருக்கு தெரிவிக்கவில்லை. கடவுளின் பெயரால் வாழும் இவரைப் போன்றவர்களை வெறி நாய்களை விட்டு கடித்து குதற வைக்க வேண்டும் என்று நடிகை குஷ்பு கடுமையாக கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களாக சிறுமிகள், பெண்கள் என தொடர்ந்து பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர். ஜம்மு காஷ்மீர், குஜராத், உத்தரபிரதேசம் என இந்தியாவின் பல்வேறு இடங்களிலும் பெண்களுக்கு எதிரான கொடுமை நிகழ்ந்து வருகின்றன. இந்த நிலையில் தலைநகர் டெல்லி அருகே காசியாபாத்தில் இருக்கும் மதராசாவில் 10 வயது சிறுமியை 17 வயது சிறுவன் பாலியல் வன்புணர்வு செய்தான். இதனைத் தொடர்ந்து அந்த சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
இதன் பின்னர், அந்த மதரசாவில் பணியாற்றும் மவுலவியும் கைது செய்யப்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர். சிறுவன், செய்த செயல் குறித்து தெரிந்த, மவுலவி அதனை போலீசாருக்கு தெரிவிக்கவில்லை என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இது குறித்து நடிகையும், காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், கடவுளின் பெயரால் வாழும் இவரைப் போன்றவர்களை வெறி நாய்களை விட்டு கடித்துக் குதற வைக்க வேண்டும். அவர்களுக்கு எல்லாம் வாழ உரிமையே இல்லை என்று கடுமையாக பதிவிட்டுள்ளார்.