"கே.எஸ். அழகிரி ஒரு பல் இல்லாத பாம்புவாக காங்கிரஸ் கட்சியில் செயல்பட்டு வருகிறார். கட்சியில் யாரேனும் தவறு செய்தால், அவர்களைகூட கண்டிக்க முடியாமல் உள்ளார். அவருக்கு ஆல் தி பெஸ்ட்."

தமிழகத்தில் திமுகவினர் குருநில மன்னர்கள் போல ஒரு குடும்பத்தில் இருந்து வருபவர்கள் மட்டும் ஆட்சி செய்கிறார்கள் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழ்நாடு சிவசேனா கட்சியை பாஜகவுடன் இணைக்கும் நிகழ்ச்சி சென்னை பட்டாளத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். அண்ணாமலை முன்னிலையில் சிவசேனா கட்சியின் மாநில தலைவர் மற்றும் நிர்வாகிகள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் தங்களை பாஜகவுடன் இணைத்து கொண்டார்கள். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். “தமிழக டிஜிபி பதவி என்பது நடுநிலையான ஒரு பதவி. தமிழகத்தில் அனைத்து கட்சி நண்பர்களுக்கும் எட்டரை கோடி மக்களுக்கும் நியாயம், நீதி என வழங்கக்கூடிய பதவி அது. எனவேதான் டிஜிபி சைலேந்திர பாபு நடுநிலையாக இருக்க வேண்டும் என்று கூறி வருகிறோம். போலீஸில் ஆளுங்கட்சி தலையீடு என்பது அனைத்து இடத்திலும் உள்ளது.

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள், குற்றங்கள் அதிகரிக்கின்றன. இதற்கு முக்கிய காரணமே காவல் துறையின் செயல்பாடுகளில் திமுகவினர் தலையிடுவதனால்தான். திமுகவில் மாநிலம், மாவட்டம் என பல அனைவரும் ஆளும் கட்சி என்று சொல்லிக்கொண்டு காவல் துறையினருக்கு இடையூறு செய்கிறார்கள். ஆட்சியில் இல்லாத போது திமுகவினர் Go back modi என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். அப்படி அவர்கள் சொல்லியிருந்தாலும் தற்போது ஆட்சியில் உள்ளார்கள். எனவே, பாரத பிரதமரின் வருகையை தமிழக முதல்வரும் அமைச்சர்களும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தமிழகத்தின் வளர்ச்சிக்கு ஆக்கபூர்வமான முறையில் பிரதமர் வருகையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் திமுகவினர் குருநில மன்னர்கள் போல ஒரு குடும்பத்தில் இருந்து வருபவர்கள் மட்டும் ஆட்சி செய்கிறார்கள். இதுபோன்ற சிந்தாந்தம் பாஜகவில் இல்லை. பாஜகவில் கடைசி நிலை தொண்டனும்கூட முதல்வர் ஆக முடியும். கே.எஸ். அழகிரி ஒரு பல் இல்லாத பாம்புவாக காங்கிரஸ் கட்சியில் செயல்பட்டு வருகிறார். கட்சியில் யாரேனும் தவறு செய்தால், அவர்களைகூட கண்டிக்க முடியாமல் உள்ளார். அவருக்கு ஆல் தி பெஸ்ட் என்றுதான் சொல்ல முடியும். சங்கி என்பதே தவறான வார்த்தை. சீமானைப் பொறுத்தவரை அவர் ஒரு வித்தியாசமான அரசியல்வாதி” என்று அண்ணாமலை தெரிவித்தார்.