சசிகலா ரிலீஸாகும்போது அ.ம.மு.க.ங்கிற கட்சியே இருக்காது, இருக்கக்கூடாது!: தினகரை வீதியில் நிறுத்த, எடப்பாடி எகிறி அடிக்கும் ஸ்கெட்ச்
இங்கிலாந்து, அமெரிக்கா என்று செம்ம சுற்றுப்பயணம் முடித்துவிட்டு தமிழகம் திரும்பியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. வந்தும் அவரிடம் மாநில விஷயங்களுக்கு நிகராக, தமிழக அரசியல் பிரச்னைகளும் மிக முழுமையாக ஒப்பிக்கப்பட்டது. அப்போது தினகரனின் கட்சி நாளுக்கு நாள் தேய்ந்து காணாமல் போவது பற்றி விவரிக்கப்பட்டதும் செம்ம குஷியாக காது கொடுத்தாராம்.
குறிப்பாக பெங்களூரு புகழேந்தி ‘அட்ரஸ் இல்லாம பதினாலு வருஷம் இருந்த தினகரனை கொண்டு வந்ததே நான் தான்.’ என்று பேசியதான ஆடியோ வைரலாகும் விஷயத்தை கேட்டுக் குலுங்கிச் சிரித்திருக்கிறார்.கூடவே அதை பிளே பண்ணச் சொல்லி, ‘அட்ரஸ் இல்லாத தினகரன்’ எனும் வார்த்தையை திரும்பத் திரும்ப போடச் சொல்லி கேட்டவர் ‘புகழேந்தி இதுலதான் உண்மையை சொல்லியிருக்கிறார்.’ என்றாராம். உடனிருந்த அத்தனை அமைச்சர்களும் சிரித்துக் கொட்டியிருக்கின்றனர்.
தினகரனின் சரிவை பார்த்து எடப்பாடியார் சந்தோஷிக்கும் அதேவேளையில், சசிகலா விரைவில் விடுதலையாகலாம் என பொதுவாக எழுந்திருக்கும், தகவல் பற்றியும் விரிவாக ஆலோசித்திருக்கிறார். சசியை ‘நன்னடத்தை’ எனும் அடிப்படையில் கர்நாடக அரசு விரைவில் ரிலீஸ் செய்தால் அது பா.ஜ.க.வின் உத்தரவால் மட்டுமே இருக்கும்! என்பதை இ.பி.எஸ். உணர்ந்திருக்கிறார். பா.ஜ.க. அப்படி செய்வதற்கு காரணம் சசியை அ.தி.மு.க.வின் தலைவராக்கி, ஒருங்கிணைப்பாளர்கள் இருவரையும் அவருக்கு கீழ் நிலையில் வைத்து கட்சியை நடத்த சொல்வார்கள் என்பதையும் இ.பி.எஸ். புரிந்து வைத்திருக்கிறார்.
சசியின் தலைமையை ஏற்பதா, மறுப்பதா என்பது பற்றி அப்புறமாக யோசிக்கலாம் என்று முடிவெடுத்திருக்கும் இ.பி.எஸ்., முதல் கட்டமாக தினகரனை அரசியலில் இருந்தே அப்புறப்படுத்துவதற்கான பணிகளை மிக முழுமையாக கையில் எடுத்திருக்கிறார். கூடியவிரைவில் புகழேந்தி தினகரனை விட்டு வெளியேறிடுவார் அல்லது வெளியேற்றப்படுவார். அதன் பின் வெற்றிவேல், பழனியப்பன் உள்ளிட்ட வெகு சிலர் மட்டுமே தினகரனுடன் இருக்கிறார்கள். இவற்றில் பழனியப்பனால் பெரிய நன்மை எதுவும் தினகரன் அணிக்கு கிடைத்திடாது.
ஆனால் அடிக்கடி ரகசிய வீடியோ, ஆடியோ என வெடிகுண்டுகளை பற்ற வைத்துக் கொண்டிருக்கும் வெற்றிவேலை தினகரனை விட்டு உடனடியாக வெளியேற்றிட வேண்டும். ஒண்ணு அவர் அ.தி.மு.க.வுல வந்து சேரணும். இல்லேன்னா சைலண்டா ஒதுங்கிடணும். ரெண்டுல ஏதாவது ஒண்ணு நடக்கணும்! என்று டோட்டலாக தினகரனின் கூடாரத்தைக் காலி பண்ணிவிட்ட முடிவு செய்திருக்கிறார்கள்.
இ.பி.எஸ்.ஸின் இந்த முடிவு பற்றி பேசும் அ.தி.மு.க. நிர்வாகிகள் “சசிகலா ஜெயில்ல இருந்து ரிலீஸாகி வெளியில வரும்போது, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அப்படிங்கிற கட்சியே இருக்க கூடாது. இதுதான் இ.பி.எஸ்.ஸோட ஒரே டார்கெட். ஆர்.கே.நகரில் ஜெயித்து சட்டமன்றம் போய் உட்கார்ந்த தினகரனை அவரது கட்சிக்காரங்க ‘தனி ஒருவன்! தனி ஒருவன்!’ அப்படின்னு பெருமையா கூப்பிடுவாங்க. இ.பி.எஸ்.ஸின் எண்ணமும் அதுதான்.
யாருமே ஆதரவுக்கு இல்லாத, எந்த நிர்வாகியும் கூட நிற்காத, ஒரு தொண்டன் கூட நம்பி காத்திருக்காத ஒரு தனி மனுஷனா தினகரனை மாற்றத்தான் துடிக்கிறார். அது நிச்சயம் நடக்கும்.” என்கிறார்கள்.
பார்ப்போம்!