களம் மாறினார் கம்ப்யூட்டர் சங்கர்: ஆளும் அணிக்குள் தினகரனின் ஸ்லீப்பர் செல் நுழைந்ததா? பதறித்தெறிக்கும் அ.தி.மு.க. நிர்வாகிகள்.
ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்தவர் யார்? என்று கேட்டால் ‘பூங்குன்றன் தான் வேற யாரு?’ என்று அ.தி.மு.க. கட்சியினர் தடாலடியாய் பதில் சொல்வார்கள். ஆனால் பூங்குன்றனுக்கும் கீழே ஜெயலலிதாவின் நேரடி உதவியாளர் ஒருவர் இருந்தார் அவர்தான் சங்கர்.
கம்ப்யூட்டர் சங்கர் என்று போயஸ் இல்ல வட்டாரத்தில் அழைக்கப்படுபவர். காரணம்? இவருடைய பணியே ஜெயலலிதாவின் அறிக்கைகளை கம்ப்யூட்டரில் டைப் செய்வதுதான்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னும் இவர் போயஸ் கார்டனுக்கு வந்து போய்தான் இருந்தார். தினகரனுடன் நெருக்கமாக இருந்தார். சசி - தினகரன் அண்ட்கோவுக்கு எதிராக நடந்த ரெய்டு மேளாவில் பூங்குன்றன் சிக்கி சின்னாபின்னாமான நிலையில் சங்கர் தப்பிவிட்டார். அவரை ரெய்டு டீம் வளைக்கவேயில்லை.
தினகரனின் ஆதரவாளராக இந்த கம்ப்யூட்டர் சங்கர் இருந்த நிலையில் திடீரென பழனி மற்றும் பன்னீரின் ஆதரவாளராக மாறியிருக்கிறார். அதே கையோடு ராயப்பேட்டையில் உள்ள கழக தலைமை கழகத்தில் கம்ப்யூட்டர் அறையில் முக்கியப் பொறுப்பில் உட்கார வைக்கப்பட்டுள்ளாராம்.
இந்த தகவல் ஆர்.கே.நகர் தேர்தல் பிஸியிலிருந்த தினகரனுக்கு பெரும் அதிர்ச்சியை தந்திருக்கிறது.
போயஸில் ஜெ.,வின் கம்ப்யூட்டரை மெயிண்டெயின் செய்த வகையில் சங்கருக்கு சில பல உள் விஷயங்கள், ரகசியங்கள் அத்துப்படி. இப்போது இடம் மாறிய நிலையில் அந்த தகவல்களை அங்கே ஒப்பிவித்துவிடுவாரோ என்று தினகரன் பயப்படுவதாக சொல்கிறார்கள்.
அதனால் சங்கரை களம் நகர்த்தியது யார்? ‘நீ வராவிட்டால் உன் வீட்டிலும் ரெய்டை நடத்த வைப்போம்!’ என்று சொல்லி மிரட்டி இழுத்தார்களோ! என்று தூண்டில் போட்டு விஷயத்தை தேடுகிறாராம்.
கம்ப்யூட்டர் சங்கர் களம் மாறிய வகையில் பழனி - பன்னீர் இருவருக்கும் சந்தோஷம்தான்.
ஆனால் அதேவேளையில் சங்கர் இங்கே வந்து தலைமை கழகத்தின் கம்ப்யூட்டர் பிரிவில் உட்கார்ந்திருப்பதே இங்கே நடக்கும் விஷயங்களையும், தயாராகும் ஆவணங்களையும், கட்சி ரீதியில் எடுக்கப்படும் முடிவுகளையும் முன் கூட்டியே தினகரனுக்கு சொல்லத்தானோ! ஒருவேளை இவர் தினகரனின் ஸ்லீப்பர் செல்லோ? என்று சில நிர்வாகிகள் டவுட்டுகிறார்களாம்.