சசிகலா மீது தனிப்பட்ட முறையில் மரியாதை வைப்பது தவறு இல்லையென்று தெரிவித்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, ஆனால் அரசியல் ரீதியாக சசிகலாவிற்கு மரியாதை கிடையாது என கூறியுள்ளார்.

கொங்கு மண்டலத்தில் சசிகலா சுற்றுப்பயணம்

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக சந்தித்த அனைத்து தேர்தல்களும் தொடர் தோல்வியே கிடைத்துள்ளது. இதற்கு அதிமுகவில் ஒற்றுமையில்லாமல் பிரிந்து இருப்பது தான் காரணம் என கூறப்படுகிறது. எனவே அதிமுகவில் சசிகலாவை இணைக்க வேண்டும் என ஒரு பிரிவினர் வலியுறுத்தி வறுகின்றனர். இதற்கு வாய்ப்பே இல்லையென்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சசிகலா நாளை முதல் கொங்கு மண்டலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
கிருஷ்ணகிரியில் 31 ஆம் தேதி தனது பயணத்தை தொடங்கும் சசிகலா, காட்டு வீர ஆஞ்சநேயர், தேன்கனிக்கோட்டை கால பைரவர் கோவில்களில் தரிசனம் செய்ய உள்ளார். தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் மேச்சேரி பத்ரகாளியம்மன், எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரர் கோவில்களில் வழிபாட்டில் கலந்து கொள்கிறார். இதனையடுத்து இரவில் சேலத்தில் தங்கும் சசிகலா சேலம் மாவட்டத்தில் உள்ள தனது ஆதரவாளர்களை சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கோட்டையாக உள்ள சேலம் மாவட்டத்திற்கு வரும் சசிகலாவிற்கு உற்சாக வரவேற்பு அளிக்க சசிகலா ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளனர். அதே நேரத்தில் சசிகலாவை வரவேற்க யாரும் செல்ல கூடாது என அதிமுகவினருக்கு வாய்மொழி உத்தரவானது பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சசிகலாவிற்கு மரியாதை கொடுக்கலாம் ?

 கொங்கு மண்டலத்தின் தனது பயணத்தின் அடுத்த கட்டமாக ஏப்ரல் மாதம் 1-ந்தேதி நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில், ஈரோடு பண்ணாரி மாரியம்மன் கோவில்களில் தரிசனம் செய்யும் அவர் திருப்பூர் வழியாக கோவை செல்கிறார். அங்கு ஈச்சனாரி விநாயகர் கோவிலில் தரிசனத்தோடு தனது கொங்கு மண்டல பயணத்தை நிறைவு செய்கிறார். இந்தநிலையில் சசிகலா கொங்கு மற்றும் வட மாவட்ட சுறுப்பயணம் தொடர்பாக கருத்து தெரிவித்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் சசிகலா மீது தனிப்பட்ட மரியாதை இருப்பதாக தெரிவித்தது எந்த தவறும் இல்லையன்று தெரிவித்தார். ஏனென்றால் 2001ஆம் ஆண்டில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா பன்னீர்செல்வத்தை அமைச்சர் ஆக்கினார். அப்போதிலிருந்து ஜெயலலிதா மறைவு வரை பல்வேறு பொறுப்புகளில் ஓ.பன்னீர்செல்வம் இருந்து வந்ததாக தெரிவித்தார். ஜெயலலிதாவுடன் சசிகலா உடன் இருந்த காரணத்தினால் அவர் மீது மரியாதை வைப்பது எந்த ஒரு தவறும் இல்லை என கூறினார். ஆனால் அரசியல் ரீதியாக சசிகலாவுக்கு மரியாதை கிடையாது என கூறினார். 

முதல் கையெழுத்து போட்டவர் ஓபிஎஸ்

சசிகலாவை சந்தித்த அதிமுகவினரை கட்சியிலிருந்து நீக்கம் செய்வதில் முதல் கையெழுத்துப் போட்டவர் ஓ. பன்னீர்செல்வம் என தெரிவித்தார். சசிகலாவை புறம்தள்ளி ஒதுக்கி விட்டதாக தெரிவித்தார்,. எனவே தான் சசிகலா தன்னை பாதுகாத்துக் கொள்ளவும் முன்னிலைப் படுத்திக் கொள்ளவும் சுற்றுப்பயணம் செய்து வருவதாகவும் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.