அதிமுக அலுவலகம் சாவியை எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு வழங்கியது தவறு இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதுடன்,  இது தொடர்பாக ஓபிஎஸ் தரப்பு தெடுத்த மனுவை  தள்ளுபடி செய்துள்ளது.  

அதிமுக அலுவலக சாவி தொடர்பாக ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிச்சாமி தரப்பிடம் வழங்கப்பட்டதில் எந்த தவறும் இல்லை என்றும் நீதிமன்றம் அதில் கூறியுள்ளது. இந்த கருத்து ஓபிஎஸ் தரப்பிற்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கடந்த ஜூலை 16ஆம் தேதி எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் ஓ.பன்னீர்செல்வம் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் அதிமுக அலுவலகம் சென்றால் அங்கு கலவரம் வெடித்தது. அதிமுக அலுவலகத்திற்குள் நுழைந்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் அங்கிருந்த ஆவணங்களை அள்ளிச் சென்றனர். எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் அதை தடுக்க முயற்சித்ததில் இருவருக்கும் இடையே கைகலப்பு நடந்தது.

இதனையொட்டி அங்கு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டதை அடுத்து கலவரம் கட்டுக்குள் வந்தது. இதையடுத்து வருவாய் துறை அதிகாரிகள் அதிமுக அலுவலகத்திற்கு பூட்டி சீல் வைத்தனர். இதை எதிர்த்து ஓபிஎஸ் இபிஎஸ் இரு தரப்பினருமே சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த விசாரணை ஜூலை 20-ஆம் தேதி நடைபெற்றது. அதில் அதிமுக அலுவலகம் சாவியை எடப்பாடி பழனிச்சாமியிடம் ஒப்படைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் அதிமுக அலுவலகத்தை எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார், கடந்த மாதம் 4ஆம் தேதி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது, 

இதற்கான வழக்கு விசாரணையின்போது எடப்பாடி பழனிச்சாமி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை ஒப்படைத்தது தவறு என ஓபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது. எனவே உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும் இது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் மற்றும் வருவாய்த்துறையினர் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மூன்று வார கால இடைவெளிக்குப் பிறகு அதிமுக அலுவலகம் சாவி தொடர்பாக இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் தெரிவித்த கருத்துகள் ஓபிஎஸ் தரப்பை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் எப்படி அதிமுகவுக்கு உரிமை கோருகிறார் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினார், ஜனநாயக நாட்டில் ஒரு அரசியல் கட்சியை முடக்குவது செயல்படவிடாமல் தடுப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என கூறியதுடன், ஓ பன்னீர் செல்வத்தின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். பொதுக்குழு கூட்டம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிச்சாமியிடம் கொடுத்தது சரிதான் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருப்பது ஓபிஎஸ் தரப்புக்கு நெருக்கடியையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.