கருப்பு பூஞ்சைக்கான மருந்து போதவில்லை.. மத்திய அரசு விரைந்து அனுப்ப வேண்டும்- அலறும் மா.சு.
கரும்புஞ்சை நோய்காக மத்திய அரசின் சார்பில் இதுவரை 1790 மருத்துகள் மட்டுமே தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் 30 ஆயிரம் அளவில் தேவைப்படுகிறது.
தமிழகத்திற்கு கருப்பு பூஞ்சைக்கான மருந்து 30 ஆயிரம் அளவில் தேவைப்படுகிறது. எனவே கூடுதலாக மருந்துகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மத்திய அரசிற்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா படிப்படியைக குறையத் தொடங்கியுள்ளது. ஆனாலும் சில மாவட்டங்களில் அதன் தாக்கம் கட்டுக்குள் வரவில்லை, எனவே மேலும் ஒருவார காலத்திற்கு தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், நீலகிரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நாளை மற்றும் நாளை மறுநாள் கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்கிறார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
நீலகிரி மாவட்டத்தில் மருந்து உற்பத்தி நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளேன். தமிழகத்தில் தடுப்பூசி உற்பத்தி செய்யும் பட்சத்தில் அந்த நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளோம். தமிழகம் முழுவதும் நேற்று இரவு வரை 32646 ஆக்சிஜன் மற்றும் சாதாரண படுக்கைகள் காலியாக உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வதற்கான கூடுதலாக 2000 மருத்துவர்கள், 6000 செவிலியர்கள், 3700 மருத்துவ பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு தொடர்ச்சியாக பணியாற்றி வருகின்றனர். தமிழகம் முழுவதும் 660 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கையிருப்பில் உள்ளது. ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏதும் இல்லை.
கரும்புஞ்சை நோய்காக மத்திய அரசின் சார்பில் இதுவரை 1790 மருத்துகள் மட்டுமே தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் 30 ஆயிரம் அளவில் தேவைப்படுகிறது. எனவே கூடுதலாக மருந்துகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மத்திய அரசிற்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளோம். செங்கல்பட்டு மாவட்டத்தில் தடுப்பூசி உற்பத்தி மையம் துவங்க மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். விரைவில் நல்ல முடிவு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.