அரசியலுக்கு வந்தால் ரஜினியும் கமலும் உருப்பட முடியாது - சு.சுவாமி
சினிமாவில் இருந்து அரசியலுக்கு வரும் யாரும் உருப்பட முடியாது என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி விமர்சித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் இரு துருவங்களான ரஜினியும் கமலும் தற்போது அரசியலிலும் இரு துருவங்களாக ஆக உள்ளனர். ரஜினியும் கமலும் அரசியலுக்கு தயாராகி வருகின்றனர். இருவருமே அரசியல் பிரவேசத்தை உறுதிப்படுத்திவிட்டனர்.
வரும் பிப்ரவரி 21ம் தேதி கமல், தான் பிறந்த ராமநாதபுரம் மண்ணில் அரசியல் பயணத்தை தொடங்க உள்ளதாக அறிவித்துவிட்டார். ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் வீட்டில் வைத்து அரசியல் கட்சியின் பெயரை அறிவித்து அரசியல் பயணத்தை தொடங்க உள்ளார்.
அதற்கு முன்னதாக மாவட்ட வாரியாக ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் கமல் ஆலோசனை நடத்தி வருகிறார்.
ரஜினியும் விரைவில் கட்சியின் பெயரை அறிவித்து தீவிர அரசியலில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சினிமா மூலம் தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமான, தமிழ் சினிமாவின் இரு துருவங்களும் ஒரே நேரத்தில் அரசியலுக்கு நுழைவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர்களின் அரசியல் வருகைக்கு ஆதரவு இருக்கும் வேளையில் எதிர்ப்புகளும் உள்ளன. குறிப்பாக ரஜினியின் அரசியல் பிரவேசத்தையும் ரஜினியையும் கடுமையாக விமர்சிப்பதில் முதன்மையானவர் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி.
இந்நிலையில், ரஜினி மற்றும் கமல் ஆகியோரின் அரசியல் பிரவேசம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சுப்பிரமணியன் சுவாமி, ரஜினி அரசியலுக்கு வருவேன் என்று சொல்கிறார். ஆனால் எங்கே வந்தார்? அவருடைய திட்டங்கள் எல்லாமே தோல்விதான். கமலும் கூறுகிறார். கமல் வரட்டும். இல்லை யார் வேண்டுமானாலும் வரட்டும். ஆனால் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தால் யாரும் உருப்பட முடியாது. அவர்களால் தமிழகத்திற்கு ஒன்றும் நடக்காது என கடுமையாக விமர்சித்தார்.