அரசியல் ரீதியாக என்னை சந்திக்க திராணியில்லாமல்.. கொடநாடு வழக்கில் என் பெயரை இணைத்து திமுக சதி செய்கிறது.

நீலகிரி மாவட்டம் கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சயனிடம் காவல்துறையினர் மறு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தை தற்போது மறுவிசாரணை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

கொடநாடு விவகாரத்தில் உண்மை குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சட்டத்தின் ஆட்சி கண்டிப்பாக நடக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். 

கோடநாடு வழக்கில் முதல்வரின் கேலிப் பேச்சினை கண்டித்தும் கவண ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேச அனுமதி அளிக்காததை கண்டித்தும் அதிமுக, பாமக, பாஜக உறுப்பினர்கள் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கலைவாணர் அரங்கம் வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘’கொடநாட்டில் நடந்த கொலை தொடர்பான வழக்கு முடியும் தருவாயில் குற்றம் சாட்டப்பட்ட சயனை வரவழைத்து அவரிடம் ரகசிய வாக்குமூலம் பெற்றதாக பத்திரிகை செய்தி வந்திருக்கிறது. அதில் என்னையும் கழகத்தைச் சேர்ந்த மற்றவர்களையும் தொடர்புபடுத்துகிறார்கள். கோடநாடு வழக்கு மூலம் அரசியல் ஆதாயம் தேட முயலும் திமுக அரசின் முயற்சி வெற்றி பெறாது. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் பணியிலே தொய்வின்றி பணியாற்றும் கட்சி அஇஅதிமுக என்பதை நிரூபித்துக் காட்டுவோம்; 

மக்களை திசை திருப்புவதற்காகவே பொய் வழக்கு பதிவு செய்கின்றனர். அரசியல் ரீதியாக என்னை சந்திக்க திராணியில்லாமல்.. கொடநாடு வழக்கில் என் பெயரை இணைத்து திமுக சதி செய்கிறது. இரு நாட்களுக்கு சட்டப்பேரவை கூட்டத் தொடரை புறக்கணிக்கிறோம்'’என அவர் தெரிவித்தார்.